தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் செப்டம்பர் 3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு குஜராத், கொங்கன், கோவா, கர்நாடகா, கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களில் மழை
தென்காசி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி ஆகிய எட்டு மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
