உண்மையாகவே உடல்ரீதியாக ஏதேனும் குறை இருந்து வருத்தப்பட்டால், அதில் வாதத்துக்காகவாவது ஒரு லாஜிக் இருக்கும். ஆனால், சிலர் ‘எனக்கு மூக்கு சரியில்லை, நிறம் சரியாக இல்லை, முகத்தின் வடிவம் சரியாக இல்லை’ என்று நினைத்துக் கொள்வார்கள். கவலையடைவார்கள்.
சரியான உயரத்திலும், சரியான வடிவத்திலும் அவர்கள் இருந்தாலும், ‘நாம் சரியாக இல்லையோ’ என்ற சந்தேகம் அவர்களுக்குள் கனன்றுகொண்டே இருக்கும்.
குண்டாக இருப்பதாக நினைத்துக் கொண்டு ஒல்லியாகக் காண்பித்துக் கொள்வதற்கான ஆடைகள் அணிவார்கள். முகத்தை மறைத்தபடி வலம் வருவார்கள்.
தன்னுடைய குறைபாடு வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக கவனமுடன் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். சமூகத்துடன் இயல்பான உறவு இருக்காது. மற்றவர்களிடம் ஓர் இடைவெளியைக் கடைப்பிடிப்பார்கள்.
வெளியிடங்களுக்கு, பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பார்கள். இதை ‘அவாய்டண்ட் பிஹேவியர்’ (Avoidant behaviour) என்கிறார்கள் உளவியல் மருத்துவர்கள்.
மேலும், ‘‘பொதுவாக இளம் வயதில் உருவகேலிக்கு ஆளானவர்களுக்கு டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர் என்று சொல்லப்படும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.
இவர்களுக்கு முதலில் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். இப்படி ஒரு பிரச்சினை உண்மையில் உங்களுக்கு இல்லை என்று புரிய வைக்க முயற்சி செய்வோம். இது மனநலப் பிரச்னை என்று எடுத்துச் சொல்வோம்.
இதில், குறைவானது (Mild), மிதமானது (Moderate) மற்றும் தீவிரமானது (Severe) என மூன்று நிலைகள் இருக்கின்றன. முதல் இரண்டு நிலைகளில் இருப்பவர்களுக்கு ஆலோசனைகள் போதும். தீவிரநிலையில் இருந்தால் மாத்திரைகள் தேவைப்படும்’’ என்கிறார்கள்.
இந்த நிலையில், ‘‘Be yourself… World will adjust என்று ஒரு பொன்மொழி இருக்கிறது. நீங்கள் உங்களோடிருங்கள் அல்லது நீங்கள் நீங்களாகவே இருங்கள். உலகம் உங்களுடன் பயணிக்க விருப்பப்பட்டால், அந்த உலகம் தன்னை உங்களுக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளட்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.
இது வீண் பிடிவாதத்துக்காகவோ, அகந்தைக்காகவோ பயன்படுத்த வேண்டிய பொன்மொழி அல்ல. தன்னம்பிக்கைக்காக, தன்னுடைய சுய மதிப்புக்காக பின்பற்ற வேண்டிய பொன்மொழி.
முக்கியமாக, தன்னுடைய உடலை அசௌகர்யமாக கற்பனை செய்து கொள்கிறவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை இது’’ என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?” : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!