மகாவிஷ்ணு திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார் என்பதற்காக திருக்குறளை இனி பாடப்புத்தகத்தில் இருந்து எடுத்து விட போகிறார்களா? என பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை வகுப்பு நடைபெற்றது. அதில் பேசிய மகா விஷ்ணு என்ற மோட்டிவேஷனல் பேச்சாளர் மாணவிகள் மத்தியில் பாவ – புண்ணியம், மறுபிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
மேலும், முன் ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் தான் மாற்றுத்திறனாளிகளாக பிறப்பதாக அவர் கூறியதுடன், அதனை எதிர்த்து கேள்விக்கேட்ட ஆசிரியர் சங்கருடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் கூறுகையில், “வகுப்பு நடத்திய மகாவிஷ்ணு திருக்குறளை மேற்கோள் காட்டி இம்மை, மறுமை என்று பேசியுள்ளார். அப்படியென்றால் திருக்குறளையும், திருவள்ளுவரையும் இனி பாடப்புத்தகத்தில் இருந்து எடுத்து விட போகிறார்களா?
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று கூறிய அவ்வையாரை பாடப்புத்தகத்தில் இருந்து எடுத்துவிடுவார்களா?
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கையில், பள்ளி குழந்தைகளுக்கு நன்னெறி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படி தான் மகாவிஷ்ணு என்பவரின் வகுப்பும் நடத்தப்பட்டுள்ளது. அவர் ஒன்றும் தனது விருப்பத்தின் பேரில் வந்து பள்ளியில் வகுப்பெடுக்கவில்லை” என்று உமா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தலைமை ஆசிரியை – நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்!
அதே போன்று தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகத் தெளிவாக, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் தான் இந்த நிகழ்ச்சி மற்றும் பேச்சு அமைந்திருந்தது என்றும் மத ரீதியான கருத்துக்கள் எதுவுமே சொல்லப்படவில்லை என்கிறார் தலைமை ஆசிரியை.
ஆனால், யாரோ சிலரின் சமூக ஊடக பதிவுகளின் அடிப்படையில் பயந்து கொண்டு அமைச்சர் அன்பில் மகேஷ், அவசர கதியில் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்திருப்பது நகைப்புக்குரியது மட்டுமல்ல, கண்டிக்கதக்கதும் கூட.
ஆன்மீகமும் அறிவியல் தான் என்பதை அறியாமல் பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து விரோத சிந்தனையை விதைக்கும் தீய சக்திகளுக்கு துணை போகிறது தமிழக அரசு. மாணவிகளின் தன்னம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் எடுக்கப்பட்ட தலைமை ஆசிரியையின் மீதான நடவடிக்கையை அரசு திரும்பப்பெற வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அன்று நடிகர் தாமு… இன்று மகா விஷ்ணு… மாணவர்களை அழ வைக்கும் மோட்டிவேஷன் ஸ்பீக்கர்ஸ்!
அன்று நிராகரிப்பு… இன்று வரவேற்பு!- கௌதம் அதானி வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யம்