உலகம் முழுவதும் 200 கோடி மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக மெட்டாவின் வாட்ஸ் அப் உள்ளது. அடிக்கடி அப்டேட்டுடன் பயனர்களை தக்கவைத்திருக்கும் வாட்ஸ் அப் 2023 புத்தாண்டையொட்டி ஒரு அதிரடியான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
உலகின் பல பகுதிகளிலும் கலவரங்கள், மோதல்கள் நடைபெறும் போது பொதுவாக அதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் இணைய சேவை முடக்கம் என்ற ஆயுதத்தை முதலில் கையில் எடுப்பார்கள்.
இதனால் பொதுமக்கள் சம்பவ இடத்தில் நடைபெறும் காட்சிகளை சமூகவலைதளங்களில் பதிவிடுவதும் பரப்புவதும் தடைசெய்யப்படும்.
கடந்த ஆண்டு 22 வயதான ஈரானியப் பெண் மஹ்சா அமினி காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் மரணமடைந்தது ஈரான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அமினிக்கு நீதிக்கேட்டு போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான பெண்கள் மீது ஈரான் அரசு காவல்துறையை ஏவியது.
அப்போது இணைய சேவையை முடக்கியதால் போலீசாரின் அத்துமீறலை சமூகவலைதளங்களில் பாதிக்கப்பட்ட பெண்களால் பதிவிட முடியவில்லை.
பின்னர் சிறிது காலத்திற்கு பிறகு வந்த காட்சிகள் அனைத்தும் உலகம் முழுவதும் காண்போரை கலங்க வைத்தன.

இதனை கருத்தில் கொண்டு வாட்ஸ் அப் செயலியில் இணைய சேவை தடைப்பட்டாலும் புகைப்படம், வீடியோ மற்றும் கருத்துகள் போன்றவற்றை பகிர புதிய ’பிராக்ஸி’ அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்த அப்டேட்டை நேற்று (ஜனவரி 5) வெளியிட்ட வாட்ஸ் அப் நிறுவனம், ”இணைய சேவை முடக்கம் மக்களின் மனித உரிமைகளை மறுக்கின்றன. மக்கள் அவசர உதவி பெறுவதை தடுக்கின்றன.
இணைய முடக்கத்தின் போது உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் செய்திகளை உரியவர்களுக்கு பகிர முடியாமல் கட்டுப்படுத்தப்படுகின்றனர். இதற்கு முடிவு கட்டும் விதமாக தேவைப்படும் இடங்களில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான வாட்ஸ் அப் பயனர்களுக்கு ப்ராக்ஸி ஆதரவை அறிமுகப்படுத்துகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளது.
ப்ராக்ஸி என்றால் என்ன?
இணைய சேவை முடக்கப்படும் போது, தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகளால் அமைக்கப்பட்டுள்ள பிராக்ஸி சேவையகங்கள் மூலம் வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு இலவச மற்றும் பாதுகாப்பான இணைப்பை செயல்படுத்தும்.
அதன்படி ப்ராக்ஸியை பயன்படுத்துவதன் மூலம் இனி இணைய சேவை முடக்கப்பட்டாலும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும்.
ப்ராக்ஸி சேவையை பயன்படுத்தும்போது பயனர்களுக்கு உயர் மட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வாட்ஸ் அப் வழங்கும். பயனரின் தனிப்பட்ட செய்திகள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படும்.
அவை அனுப்புநருக்கும் பெறுநருக்கும் இடையில் இருப்பதையும், இடையிலுள்ள யாருக்கும் தெரியாமல் இருப்பதையும் உறுதிசெய்யும்.
அதற்கு சமூக ஊடகங்கள் அல்லது தேடுபொறிகள் மூலம் நம்பகமான ப்ராக்ஸி சேவையகங்களை பயனர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
ப்ராக்ஸி சேவையை பெறுவது எப்படி?
முதலில் வாட்ஸ் அப் செயலியின் சமீபத்திய அப்டேட் வெர்சனை பயனர்கள் பெற வேண்டும்.
வாட்ஸ் அப் செயலியில் மேலே வலது பக்கத்தில் இருக்கும் மெனு பட்டனை கிளிக் செய்து செட்டிங்ஸ்க்கு செல்ல வேண்டும்.
பின்னர் Storage and Dataவை கிளிக் செய்து கடைசியாக உள்ள Proxy Settings பகுதிக்கு செல்லலாம்.
அதனை தொடர்ந்து ப்ராக்ஸியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
பின்னர் Set Proxy யை கிளிக் செய்து பிராக்ஸி சேவையகத்தின் முகவரியை டைப் செய்து சேமிக்க வேண்டும்.
இணைப்பு வெற்றிகரமாக இருந்தால் ஒரு ’டிக்’ குறியீடு காண்பிக்கப்படும்.
ப்ராக்ஸியைப் பயன்படுத்தி பயனர்கள் இன்னும் WhatsApp செய்திகளை அனுப்பவோ அல்லது பெறவோ முடியவில்லை என்றால், அந்த ப்ராக்ஸி தடுக்கப்பட்டிருக்கலாம்.
தடுக்கப்பட்ட ப்ராக்ஸி முகவரியை ஒருவர் நீண்ட நேரம் அழுத்தி அதை நீக்கலாம், பிறகு புதிய ப்ராக்ஸி முகவரியை உள்ளிட்டு மீண்டும் முயற்சிக்கலாம்.
இதன் மூலம் இணைய சேவை துண்டிக்கப்பட்ட காலத்திலும் வாட்ஸ் அப் செயலியை பயனர்கள் பயன்படுத்த முடியும்.
கிறிஸ்டோபர் ஜெமா
கலைஞர் பெயரை மறந்ததா, மறைத்ததா பபாசி? தங்கம் தென்னரசு வைத்த குட்டு! கமல் லிங்குசாமி இணையும் புதிய படம்?