இன்று (அக்டோபர் 30) நடைபெறும் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான சூப்பர் 12 போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் வேண்டிக்கொள்வதாக பதிவிடப்படும் ட்விட்டர் பதிவுகள் வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் விளையாடும் 12 அணிகளும் அரையிறுதிக்குள் நுழைவதற்குப் போராடி வருகின்றன.
ஒரு புறம் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க, மற்றொரு புறம் ரசிகர்கள் அதனைக் கொண்டாடி வருகின்றனர்.
அதிலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக, சில தினங்களுக்கு முன்பாக, இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் பயிற்சி செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த ரசிகர்கள் அதனைக் கண்டு ரசித்ததோடு, வீரர்களையும் உற்சாகப்படுத்தினர்.
விராட் கோலியின் பாகிஸ்தான் ரசிகர்
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் உருவப்படத்தை, ஆர்.ஏ.கடானி என்ற பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், கடற்கரை மணலில் வரைந்து அசத்தியுள்ளார்.
இந்த மணல் ஓவியத்தைப் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் கடற்கரையில் கடானி வரைந்துள்ளார். இந்த ஓவியம் மூலம் விராட் மீது அவர் வைத்திருக்கும் அன்பு வெளிப்பட்டு உள்ளது.
இந்திய வீரருக்காகப் பாகிஸ்தான் ரசிகரால் வரையப்பட்ட இந்த ஓவியம், சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பாகிஸ்தான் ரசிகர்களின் வேண்டுதல்
மேலும், இன்று இந்தியா – தென்னாப்பிரிக்கா அணி சூப்பர் 12 சுற்றில் மோதவுள்ளது.
இன்று நடக்கவிருக்கும் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவைத் தோற்கடித்தால் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேற வேண்டியதுதான்.
ஆகையால், இந்திய ரசிகர்களோடு இணைந்து பாகிஸ்தான் ரசிகர்களும் இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ஆகையால் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வரும் கருத்துகளும் தற்போது டிரெண்டிங் ஆகி வருகின்றன.
மோனிஷா
ஹாலோவீன் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம் : அதிகரிக்கும் உயிர்பலி!