சென்னையில் கடலுக்கு அடியில் நீச்சல் வீரர்கள் செஸ் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை மாமல்லபுரத்தில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் வகையில், தமிழக அரசு செஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. நேப்பியார் பாலம் முழுவதும் செஸ் கட்டம் போல் வண்ணம் தீட்டப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் சின்னமான தம்பி சிலை சென்னையின் பல பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் தருண் ஸ்ரீ மற்றும் அவரது குழுவினர் புது முயற்சியாகக் கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் செஸ் விளையாடி அசத்தியிருக்கிறார்கள்.
நீலாங்கரை கடற்கரையில், செஸ் சின்னமான தம்பி உடை அணிந்து படகில் சென்று கடலுக்குள் இறங்கி செஸ் விளையாடியிருக்கின்றனர்.
அப்போது நம்ம சென்னை நம்ம செஸ் போர்டும் வைத்திருந்தனர். இந்தக் குழுவினர் எடுத்த வீடியோ, தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
கடலுக்கு அடியில் திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டம் ஆகியவை நடந்து வந்த நிலையில் தற்போது செஸ் விளையாடி அனைவரது கவனத்தையும் நீச்சல் வீரர்கள் ஈர்த்துள்ளனர்.
பயிற்சியாளர் அரவிந்த் தருண் ஸ்ரீ காரப்பாக்கத்தில் அரவிந்த் ஸ்குபா என்ற பெயரில் நீச்சல் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்