கவலை இல்லாத மனிதரைக் காண்பது அரிது. இப்போதெல்லாம் சிறு பிள்ளைகள் கூட கவலைக்கு ஆளாகிறார்கள். கவலைப்படும்போது நம் உடலிலும் மனதிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒரு நபர் கவலைப்படும்போது அவருக்கு உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?
எந்த நேரமும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் பதற்றம், படபடப்பு, அதிகமாக வியர்ப்பது, அமைதியின்மை மற்றும் எரிச்சல் தோன்றும்.
இதனால் ரத்த அழுத்தம் உயரும். செய்யும் வேலையில் கவனமில்லாமல் போகும். அதனால் இன்னும் பதற்றம் அதிகமாகி மன அழுத்தத்தைக் கொடுக்கும். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.
அதீதமாகக் கவலைப்படும்போது உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய், தூக்கமின்மை, சிந்தித்து செயல்படும் திறன் குறைதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
கர்ப்பமாக இருக்கும் ஒரு தாய் கவலைப்பட்டால்,கருவில் உள்ள சிசுவின் நரம்பியல் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் அதிகமாக கவலையுறும்போது மாரடைப்பு கூட ஏற்படலாம்.
கவலை இதயத்தை மட்டுமல்ல, வயிற்றையும் பாதிக்கிறது. இரைப்பை, குடல், ஜீரண உறுப்புகள் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டைக் குறைக்கிறது.
அதேபோல், மன நிலையிலும் மாற்றங்களை உண்டாக்குகிறது. ‘டிமென்ஷியா’ போன்ற மனநல பாதிப்பைத் தருகிறது. டிமென்ஷியாவால் பாதிக்கப்படும்போது நினைவாற்றல் குறைந்து, சிந்திக்கும் திறன் தடைபடும்.
மேலும், நாள்பட்ட கவலை புற்றுநோயைக் கூட வரவழைக்குமாம். எனவே, கவலைகளை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்ளக் கூடாது.
இந்த நிலையில் கவலையை மறக்க… இதை செய்து பாருங்கள்!
ஒரு காகிதத்தில் உங்கள் கவலைகளை எழுதி பின் அதை சுக்கு நூறாகக் கிழித்து விடவும். இதன் மூலம் மனதில் லேசான உணர்வு தோன்றும். ஆன்மிக நாட்டமுள்ளவர்கள் கோயிலுக்குச் சென்று தெய்வத்திடம் முறையிடலாம் அல்லது வீட்டுப் பூஜை அறையில் அமர்ந்து பிரார்த்தனை செய்யலாம்.
தினமும் இருபது நிமிடங்கள் இப்படி தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். சில நிமிடங்கள் சூரிய ஒளி உடலில் படும்படி நடக்கலாம். குடும்பத்தினர், மனதுக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்களிட மனம்விட்டுப் பேசலாம்.
மேலும், மனதுக்கு உற்சாகம் தரும் நல்ல புத்தகங்களை வாசித்தல், நல்ல பாடல்களைக் கேட்பது, வாய் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளை கண்டு ரசிப்பது, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வது, எல்லாவற்றிற்கும் மேலாக கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்து, பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி அலசி ஆராயலாம். முக்கியமாக… நன்றாகத் தூங்கி எழுந்தாலே பாதி கவலைகள் காணாமல் போய்விடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே நிர்வாகம் சொன்ன முக்கிய தகவல்!
பாஜகவுக்கு 20 ஓட்டா? – அப்டேட் குமாரு
சென்னை ஐஐடி – இளையராஜா ஒப்பந்தம்!
டிஜிட்டல் திண்ணை: மத்திய நிதி அமைச்சராகும் பிடிஆர்? ஸ்டாலின் நடத்திய ’கேபினட்’ டிஸ்கஷன்!