உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்தின் கையிருப்பில் இருந்த 75% பிட்காயின்களை விற்பனை செய்துள்ளார்.
எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முத்திரை பதித்து வரும் டெஸ்லா நிறுவனத்தை கடந்த 2003-ம் ஆண்டு எலான் மஸ்க் தொடங்கினர். இந்த நிறுவனத்தின் பெயரில் ஒரு வருடத்திற்கு முன்பு 1.5 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய பிட்காயின் எனப்படும் மெய்நிகர் கரன்சி வாங்கப்பட்டது. தற்போது, இரண்டாவது காலாண்டில் 936 மில்லியன் டாலர் மதிப்புடைய பிட்காயினை டெஸ்லா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
கிரிப்டோ கரன்சிகளின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கையால் பிட்காயின் முதலீட்டாளர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இது குறித்து விளக்கமளித்துள்ள எலான் மஸ்க் ”சீனாவில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கால் டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள நிலைத்தன்மையின்மையை சமாளிக்கவே பிட்காயின் விற்கப்பட்டது. எதிர்காலத்தில் மீண்டும் பிட்காயின்களை வாங்குவோம்.” என கூறியுள்ளார். மேலும், டாஜ்காயின் எனப்படும் மற்றொரு கிரிப்டோ கரன்சியை விற்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.