சருமப் பொலிவு என்பது வெளிப்பூச்சு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. சொல்லப்போனால் உள்ளே உட்கொள்ளும் உணவுகளால்தான் உண்மையான, நீடித்த சரும ஆரோக்கியத்தை பெற முடியும்.
அதற்கு என்ன வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்பது குறித்து விளக்குகிறார்கள் உணவியல் நிபுணர்கள்.
“இன்று பலரும் 30 சதவிகிதம் மட்டுமே ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்கிறோம். உடலுக்குத் தேவையானதைவிட குறைந்த அளவே கொழுப்புச்சத்தும் ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன.
சமைக்கும்போது வெளியேறும் ஊட்டச்சத்துகளைவிட, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் (Processed food) உள்ள ஊட்டச்சத்து முற்றிலுமாக வீணாகிவிடுகிறது.
நல்ல கொழுப்பு, வைட்டமின் சி, இ போன்றவை சரும ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானவை. முட்டைக்கரு, வேர்க்கடலை போன்றவற்றில் நல்ல கொழுப்பு இருக்கும். குறிப்பாக வைட்டமின் டி, இ இவற்றில் நிறைந்துள்ளன.
உடலின் மிகப்பெரிய உறுப்பான தோலுக்கு, அதிகமான புரதச்சத்து தேவைப்படுகிறது. புரதச்சத்து பற்றாக்குறை ஏற்படும்போது சிலருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு சருமம் வறண்டு போகலாம்.
இதனால் செல்கள் இறக்க நேரிட்டு, பிற்காலத்தில் சருமப் பிரச்சினைகள், சருமத்தில் காயங்கள் ஏற்பட்டாலும் உடலால் எளிமையாக சீரமைத்துக் கொள்ள முடியாது.
அசைவ உணவுகளில் உள்ள சத்துகள், சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்குக் கிடைப்பதில்லை என்று கூறுவதுண்டு. ஆனால், இரண்டிலுமே நம் உடலுக்குத் தேவையான சத்துகள் உள்ளன. அது நாம் எடுத்துக்கொள்ளும் அளவைப் பொறுத்து மாறுபடும்.
ஆன்டி- ஆக்ஸிடன்ட்ஸ், இயற்கையாகவே பளபளப்பான நிறமுள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் மிகுதியாகக் காணப்படுகிறது. உடல் ஆரோக்கியமாகவும், சருமம் பளபளப்பாகவும் இருப்பதற்கு இவற்றை உட்கொள்ளலாம்.
மாதுளை, பப்பாளி, எலுமிச்சை, ஸ்ட்ராபெரி போன்ற பழங்களில் இது நிறைந்துள்ளது. தினமும் கேரட், பீட்ரூட் சாப்பிட்டு வர சருமம் பொலிவுடன் காணப்படும்.
சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் என்றால் தயிர், பாதாம், வால்நட், சோயா, பட்டாணி, பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். Vegan உணவு முறை என்றால் தேங்காய்ப்பால், சோயா பால்… அசைவம் சாப்பிடுபவர்களாக இருப்பின் முட்டை, முட்டையின் கரு, மீன் வகைகள், கடல் மீன்களை எடுத்துக் கொள்ளலாம்.
அதே நேரம் எந்த வகை உணவு எடுத்துக் கொள்வோரும், பழங்கள் சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும். காய்கள் மற்றும் பழங்களில்தான் அதிக அளவு உடல் மற்றும் சருமத்துக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இருக்கின்றன.
தொடர்ந்து ஜூஸ் குடித்து வருவதால் ஓரிரு மாதங்களில் முகப்பொலிவை பெறலாம். வாழைப்பழத்துடன், வால்நட் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து மில்க் ஷேக் போல் செய்து வாரத்தில் மூன்று நாள்கள் குடித்து வர…
சருமத்துக்குப் பொலிவும், கேசத்துக்கு ஊட்டமும் கிடைக்கும். கீரையில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், வாரத்தில் மூன்று நாள்கள் சாப்பிட்டு வர, ஹீமோகுளோபின் அதிகரிக்கும்… இது சருமத்தைப் பளபளப்பாக்கும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்