2 செயற்கைக் கோள்களின் சென்சாரும் செயலிழந்தது: இஸ்ரோ

Published On:

| By Jegadeesh

எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 2 செயற்கைக் கோள்களை பயன்படுத்த இயலாது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2 செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இ.ஓ.எஸ்-02, மற்றும் இந்திய மாணவர்கள் உருவாக்கிய ஆசாதிசாட் ஆகிய செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி-டி 1 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (ஆகஸ்டு 7) விண்ணில் ஏவப்பட்டது.

அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கிய 6 மணி நேர கவுன்ட்டவுன் முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு செயற்கைக்கோள்களும் காலை 9.18 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

144 கிலோ எடை கொண்ட இ.ஓ.எஸ்-02 செயற்கைக்கோள் பூமியை கண்காணிக்க பயன்படுத்தப்படவுள்ளது. இதேபோன்று 8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் செயற்கைக்கோளில் சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ராக்கெட்டில் இருந்து செயற்கை கோள்களை பிரிக்கும் பணிகளை மேற்கொண்டபோது, செயற்கை கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார். சிக்னல் இழப்புக்கான காரணத்தை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் நீண்ட நேரம் போராடினார்கள். ஆனால் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில், எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

”இந்த ராக்கெட், செயற்கைக்கோள்களை 356 கிமீ வட்ட சுற்றுப்பாதைக்கு பதிலாக 356 கிமீ x 76 கிமீ நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. அந்த செயற்கைக்கோள்களை இனி பயன்படுத்த முடியாது. சென்சார் செயலிழப்பே தோல்விக்கு காரணம். சென்சார் செயலிழப்பைக் கண்டறிந்து, செயற்கைக் கோள்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. குழு அமைக்கப்படடு தோல்வி குறித்து ஆராயப்படும். விரைவில் இது குறித்த முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும். விரைவில் எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட் உருவாக்கப்படும்” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கோரிக்கை!