இயற்கை அழகுடன் வனவிலங்குகளையும் கண்டு ரசிக்கலாம்: லிஸ்ட் இதோ!

Published On:

| By Jegadeesh

இந்தியாவில் ஏராளமான வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் பூங்காக்கள் உள்ளன. இவை அங்கு செல்லும் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்குகின்றன. அப்படி இந்த கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் சென்று ரசிக்க, இந்தியாவில் உள்ள சில வன விலங்கு சரணாலயங்களை இங்கு பார்க்கலாம்:

முதுமலை தேசிய பூங்கா

நீலகிரியின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது முதுமலை வனவிலங்கு காப்பகம்.

யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், பறக்கும் அணில், மலபார் அணில், காட்டு நாய், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நரி, காட்டு முயல், முதலை, கீரி, கழுதைப்புலி, மலைப்பாம்பு போன்ற பல்வேறு வகையான விலங்குகள் இங்கு உள்ளன.
அதுமட்டுமல்லாமல் 200-க்கும் மேற்பட்ட பறவையினங்களை இங்கே பயணிகள் ரசிக்கலாம் என்பதோடு, அரிய வகை தாவரங்களும் ஏராளம் இங்கு காணப்படுகின்றன

ரந்தம்பூர் தேசிய பூங்கா

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த தேசியப் பூங்கா முன்பு (மன்னர் காலத்தில்) அப்பகுதியை ஆண்ட மகாராஜாக்களின் வேட்டையாடும் இடமாக இருந்தது. தற்போது, பல அரிய வகை பறவைகள், மான்கள், புலிகள் மற்றும் பல விலங்கு இனங்களின் காப்பகமாக இது உள்ளது.

கிர் தேசிய பூங்கா

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள கிர் தேசிய பூங்கா சிங்கங்களுக்கு பெயர் பெற்ற ஒரு இடம் ஆகும். அதேநேரம் இந்த பூங்காவானது சிறுத்தைகள், சோம்பல் கரடிகள், பாம்புகள், முதலைகள், மானிட்டர் பல்லிகள் மற்றும் பல உயிரினங்களின் காப்பகமாகவும் உள்ளது.

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா

உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மலை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்கா, இந்தியாவின் பிரபலமான ஒரு வன விலங்கு சரணாலயம் ஆகும். அதேநேரம், இந்தியாவில் அதிக புலிகள் கொண்ட ஒரு வன விலங்கு காப்பகமாகவும் இது உள்ளது.

காசிரங்கா தேசிய பூங்கா

அசாமில் அமைந்துள்ள இந்த காசிரங்கா தேசிய பூங்கா ஆனது, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்கு பெயர் பெற்ற இடம் ஆகும். அதாவது, உலகிலேயே அதிகளவு ‘ஒற்றைக்கொம்பு காண்டா மிருகம்’ காணப்படும் ஒரு இடமாக இது உள்ளது.

பன்னர்கட்டா உயிரியல் பூங்கா

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள பன்னர்கட்டா உயிரியல் பூங்கா, புலிகள், சிறுத்தைகள், யானைகள், புள்ளிமான்கள், சாம்பர் மான்கள், பட்டாம்பூச்சிகள், பாம்புகள் மற்றும் பல உயிரினங்களுக்கு பெயர் பெற்ற ஒரு இடம் ஆகும்.

பெரியார் தேசிய பூங்கா

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் அமைந்துள்ள பெரியார் தேசிய பூங்காவானது ஆசிய யானைகள், புலிகள், குரங்குகளுக்கு பெயர் பெற்ற ஒரு இடம் ஆகும். பசுமையான சரிவுகள் மற்றும் நிலப்பரப்புகளுடன் இருக்கும் இந்த பூங்கா, சுற்றுலா பயணிகள் பலரும் செல்ல விரும்பும் ஒரு இடம் ஆகும்.

பாந்தவ்கர் தேசிய பூங்கா

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா, வெள்ளை புலிகளின் தாயகமாக உள்ளது. அதேநேரம் யானைகள், மான்கள், மலைப்பாம்பு உள்ளிட்ட ஊர்வன மற்றும் பறவைகளுக்கும் ஒரு காப்பகமாக உள்ளது.

ஹெமிஸ் தேசிய பூங்கா

கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள இந்த பூங்காவானது, இந்தியாவின் உயரமான வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாக உள்ளது. அதேநேரம் இங்கு, பனிச்சிறுத்தை, ஆசிய ஐபெக்ஸ், சிவப்பு நரி, திபெத்திய ஓநாய் போன்ற பல அழிந்து வரும் விலங்கினங்களை நாம் இங்கு காணலாம்.

மு.வா.ஜெகதீஸ் குமார்