மன வளர்ச்சி குன்றிய குழந்தையை பெற்ற தாயே மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் எஸ்.ஆர்.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர்கள் கிரண், சுஷ்மா தம்பதி. கிரண் சாஃப்ட்வேர் என்ஜினியராகவும், சுஷ்மா பல் மருத்துவராகவும் இருக்கிறார். இவர்களுக்கு 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தை பிறந்தபோதே வாய் பேச முடியாமலும், காது கேட்காமலும், மன வளர்ச்சி குன்றியும் இருந்திருக்கிறது. அந்தக் குழந்தையின் மனநலம் குன்றி இருந்ததால் சுஷ்மா கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை (ஆகஸ்ட் 5) சுஷ்மா தனது வீட்டின் 5-வது மாடி பால்கனியில் தனது 4 வயது பெண் குழந்தையை கையில் தூக்கி வைத்துக்கொண்டு நின்றுள்ளார். குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்த அவர், திடீரென்று குழந்தையை நான்காவது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளார். இதில் குழந்தை சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தையை கீழே வீசிய சில நிமிடங்களிலேயே சுஷ்மாவும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வது போல் நடித்து இருக்கிறார். பால்கனி தடுப்பு கம்பி மீது ஏறி குதிப்பது போல் செய்து இருக்கிறார். அதற்குள் அக்கம்பக்கத்தினர் மற்றும் அவரது கணவர் அங்கு வந்து சுஷ்மாவை மீட்டனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து உடனடியாக பெண்ணின் கணவர், சம்பங்கி ராம்நகர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் சுஷ்மாவை கைது செய்தனர்.
ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பும் தனது மகளை ரயில் நிலையத்தில் அனாதையாக விட்டுச் சென்றுள்ளார் சுஷ்மா. ஆனால், விஷயத்தை அறிந்த சுஷ்மாவின் கணவர், அங்கும் இங்கும் தேடி, குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். தற்போது, அந்தக் குழந்தையை மாடியிலிருந்து வீசி கொன்றுள்ளார் சுஷ்மா.
இது குறித்து மத்திய துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீனிவாஸ் கவுடா கூறுகையில், “குழந்தையை தாய் வேண்டுமென்றே பால்கனியில் இருந்து வீசியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நாங்கள் கைது செய்துள்ளோம் என்று கூறினார். உலகில் தாய்க்கு ஈடாக எதுவுமே இல்லை என்று சொல்லப்படும் நிலையில், மனவளர்ச்சி குன்றி ஏதும் அறியாத பிஞ்சுக்குழந்தையை பெற்ற தாயே மாடியில் இருந்து தூக்கி வீசும் காட்சி பார்ப்போர் மனதை உறைய வைப்பதாக இருக்கிறது,
கலை.ரா
அரசு மருத்துவமனையில் 9 கிலோ கஞ்சா பறிமுதல், அதிர்ச்சி சம்பவம்