லியோனல் மெஸ்ஸி தனது கையெழுத்திட்ட உலகக் கோப்பை ஜெர்சியை பிசிசிஐ பொதுசெயலாளர் ஜெய் ஷாவுக்கு அனுப்பியுள்ளதாக இந்திய அணி முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒருமாத காலமாக உலகை ஆட்டிப்படைத்த கால்பந்து திருவிழா கடந்த 18ம் தேதி முடிவடைந்தது. அதன் இறுதிப்போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் ஃபிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
36 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது நீண்ட நாள் கனவான உலகக்கோப்பையை 3வது முறையாக வென்றது அர்ஜென்டினா அணி. மேலும் மெஸ்ஸி தலைமையில் அர்ஜென்டினா வென்ற முதல் கால்பந்து உலகக்கோப்பை பட்டம் என்பதால் அந்த நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும் இதனை கொண்டாடி வருகின்றனர்.
அர்ஜென்டினாவின் இந்த வெற்றிக்கு உலகத்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதன்படி பிசிசிஐ பொதுசெயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “என்ன ஒரு நம்பமுடியாத கால்பந்து போட்டி! இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. ஆனால் அர்ஜென்டினா அணி 3வது முறையாக பிஃபா உலகக்கோப்பை வென்றதற்கு வாழ்த்துக்கள்! தகுதியான வெற்றி.” என்று குறிப்பிட்டுருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போது ஐபிஎல் நிர்வாக கமிட்டியில் உறுப்பினராகவும் உள்ள பிரக்யான் ஓஜா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தை கதிகலங்க செய்துள்ளது.

அதில் ஜெய்ஷாவும், அவரும் உலகக்கோப்பையில் மெஸ்ஸி விளையாடிய ஜெர்ஸியுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதோடு, “ #GOAT மெஸ்ஸி தனது கையெழுத்திட்ட ஜெர்ஸியை ஜெய் ஷாவுக்கு அனுப்பி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். என்ன ஒரு அடக்கமான ஆளுமை. எனக்கான ஒன்றை விரைவில் பெறுவேன் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
10ம் எண் பொறிக்கப்பட்ட அந்த ஜெர்ஸியில் “பரா ஜெய் ஷா (ஜெய் ஷாவுக்காக)” என்ற செய்தியுடன் மெஸ்ஸியின் கையெழுத்தும் இருக்கிறது.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் ஒருவரிடமிருந்து ஜெய் ஷாவுக்கு இதுபோன்ற சிறப்பு பரிசு கிடைத்ததைக் கண்டு இந்திய ரசிகர்கள் அவநம்பிக்கையில் உறைந்துள்ளனர்.
ஏனெனில் உலகக்கோப்பையில் விளையாடிய மெஸ்ஸி போன்ற ஜாம்பவான்களின் ஜெர்ஸிகள் பொதுவாக ஏலத்தில் விடப்பட்டு அதன்மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டப்படும். அதற்கு மாறாக மெஸ்ஸி கையெழுத்திட்ட ஜெர்ஸி ஜெய் ஷாவுக்கு கிடைத்துள்ளது. இதற்கான சரியான விளக்கமும் இருதரப்பில் இருந்தும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
எனினும் ஓஜா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் அதே நேரத்தில் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மீராமிதுன் கோரிக்கை நிராகரிப்பு: உயர்நீதிமன்றம் அதிரடி!
உல்லாசத்துக்கு அழைப்பு : சென்னையில் ஆபாச விளம்பரம்!