கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய வீடியோவை முகநூல் பக்கத்தில் வெளியிட்டவரை சிதம்பரம் போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள பேருந்து நிழற்குடையில், பள்ளி சீருடையிலிருந்த மாணவிக்கு, பாலிடெக்னிக் படிக்கும் மாணவர் ஒருவர் தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பாக, சமூகநலத்துறை அலுவலர் ரம்யா, சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
இது குறித்து சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து திருமணம் செய்துகொண்ட மாணவ மாணவியரை சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு போலீசார் நேற்று அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணையில், திருமணம் செய்துகொண்ட மாணவி சிதம்பரம் அருகே உள்ள வெங்காயதலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அங்குள்ள அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.
மாணவன், மாணவி இருவரிடமும் போலீசார் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பின்னர் சமூக நலத்துறை அலுவலர்கள் மாணவிக்கு அறிவுரை வழங்கி அவரை அழைத்து சென்றனர். மாணவன் மீது வழக்குப்பதிவு செய்யாமல் அறிவுரை வழங்கி அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
மாணவர்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோவை சிதம்பரம் அருகே உள்ள கொல்லாமுண்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜி கணேசன் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனால் மாணவியின் பெற்றோர் அவரது வீட்டிற்கு சென்று வீடியோவை நீக்கும்படி கூறியதற்கு, பாலாஜி கணேசன் மாணவியின் பெற்றோரை சாதி பெயரை சொல்லி திட்டியுள்ளார்.
இதனால் பாலாஜி கணேசன் மீது மாணவியின் பெற்றோர் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில், பாலாஜி கணேசன் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.
அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவர்கள் திருமணம் செய்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அந்த வீடியோவை வெளியிட்ட நபரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
செல்வம்
அற்றைத் திங்கள் அந்நிலவில்: திண்டுக்கல் லியோனியின் கிண்டல் பேச்சு!
‘இனி ஒரே சாதி தான்’ – சட்டம் நிறைவேற்ற ஆர்எஸ்எஸ் முன்வருமா? கி.வீரமணி