கடந்த 5ஆம் தேதி காட்டுக்குள் விடப்பட்ட மக்னா யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் ஊருக்குள் நுழைந்து விளை பயிர்களை சேதப்படுத்தியது மக்னா யானை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் யானையை பிடித்து வனத்துக்குள் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மக்னா யானையை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்ட வனத்துறையினர் கோழிகமுத்தி முகாமில் இருந்து கும்கி யானை சின்னத் தம்பியை வரவழைத்து அதன் உதவியுடன் பிப்ரவரி 5ஆம்தேதி மக்னா யானையை பிடித்து பிப்ரவரி 6ஆம்தேதி டாப்சிலிப் அருகே வரகளியார் பகுதியில் வனத்துக்குள் விட்டனர்.
எனினும் மக்னா யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் மக்னா யானை வனத்தில் இருந்து வெளியேறி கிராம பகுதிக்குள் சுற்றி வருகிறது.
சேத்துமடை கிராமம் வழியாக நல்லூத்துக்குளி, கா.க.புதூர், ஆத்து பொள்ளாச்சி, ராமபட்டினம் செல்லாண்டி கவுண்டனூர், களத்தூர் தேவம்பாடி வலசு என பல கிராமங்களை கடந்து சுற்றிக் கொண்டிருக்கிறது மக்னா யானை.
சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்திருப்பதாகவும், 100கிமீ கடந்து யானை நடந்திருப்பதாகவும் வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது சூலக்கல் அருகே கோவிந்தன் ஊர் என்ற பகுதியில் யானை ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.
அதுபோன்று மக்னாவை பிடிக்க கோழிகமுத்தியில் இருந்து மீண்டும் சின்னத்தம்பி மற்றும் ராஜவர்த்தனன் ஆகிய கும்கி யானைகளை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தசூழலில் மக்னா யானை கோவை குனியமுத்தூர் அன்புநகர் பகுதியில் வீட்டின் காம்பவுன்ட் சுவரை இடித்துத் தள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
யானை செல்லும் இடமெல்லாம் அதனை பின் தொடரும் வனத்துறையினர், யானையை பார்த்து ஆர்வமாக புகைப்படம், வீடியோ எடுக்க வெளியே வரும் மக்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
பிரியா
சென்னையில் நிலநடுக்கம்? மெட்ரோ பரபரப்பு விளக்கம்!
அனுமதியின்றி பிரச்சாரமா? நாம் தமிழர் வேட்பாளர் மேனகா பதில்!