லால் சிங் சத்தா படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் நிலையில் என் படத்தை புறக்கணிக்காதீர்கள் என்று அமீர்கான் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான் நடித்த படங்கள் நான்கு ஆண்டுகளாகத் திரைக்கு வரவில்லை. கொரோனா பொது முடக்கம், ஆர் ஆர்ஆர், கேசிஎஃப் படங்களின் வெளியீடு காரணமாக அமீர் கான் படத்தின் வெளியீட்டு தேதி மாறுதல் செய்யப்பட்டு வந்தது.
இப்போதுதான் அமீர்கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

2015ஆம் ஆண்டு அமீர் கான் அளித்திருந்த பேட்டியில், “எனது மனைவி இந்நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதால் வேறு நாட்டிற்குச் செல்லலாம் என்று என்னிடம் வருத்தத்துடன் கூறினார்” என்று தெரிவித்திருந்தார். அந்தப் பேட்டிக்கு அப்போது நாடு முழுவதும் ஆதரவு,எதிர்ப்பு கிளம்பியது. அதே பேட்டியை மேற்கோள் காட்டி லால் சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என்று அண்மையில் ட்விட்டரில் பாய்காட் லால் சிங் சத்தா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.
இதுகுறித்து நடிகர் அமீர்கான், “இதுபோன்ற பாய்காட் பாலிவுட், பாய்காட் அமீர்கான், பாய்காட் லால் சிங் சத்தா ஹேஷ்டேக்குகள் எனக்கு மிகவும் கவலையை அளிக்கிறது. காரணம், ஏராளமானோரின் இதயங்கள் எனக்கு இந்தியா பிடிக்காது என்று நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. நான் உண்மையில் இந்த நாட்டை நேசிக்கிறேன். நான் அப்படித்தான். சிலர் அப்படி உணர்ந்தால் அது துரதிர்ஷ்டவசமானது. தயவு செய்து எனது படத்தை புறக்கணிக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.
ஃபாரஸ்ட் கம்ப் எனும் பிரபல ஆங்கில திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இந்திப் பதிப்பாக தயாராகி உள்ளது லால் சிங் சத்தா கரீனா கபூர், மோனா சிங் மற்றும் நாக சைதன்யா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இதனை அமீர் கான், கிரண் ராவ் மற்றும் வியாகாம் 18 மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. அமீர்கான் படத்தைத் தொடர்ந்து ஷாருக்கானின் ‘பதான்’ படமும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது.
இராமானுஜம்