திருச்சி சூர்யாவை, ’தனது தம்பி மாதிரி’ என்று டெய்சி பேசியது முதல் கரகாட்டக்காரன் படத்தில் கோவை சரளா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் இடம்பெற்ற ஒரு காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடும் சர்ச்சையான ஆடியோ!
தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக உள்ளவர் திருச்சி சூர்யா. இவர் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சியுடன் சமீபத்தில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாக கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில், டெய்சிக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததுடன், அருவருக்கத்தக்க வகையில் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து மிகவும் தரக்குறைவாகவும் சூர்யா பேசியிருந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சூர்யாவுக்கு குறிப்பிட்ட நாட்கள் கட்சி நிகழ்வில் பங்கேற்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தடை விதித்தார்.
மேலும் மாநில துணைத்தலைவரான கனகசபாபதி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் திருப்பூரில் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
சூர்யா எனக்கு தம்பி மாதிரி!
அதன்படி திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கனகசபாபதி தலைமையில் இரு தரப்பினரிடமும் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
3 மணி நேர விசாரணைக்கு பின்னர் டெய்சி, சூர்யா சிவா ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய டெய்சி, ”சூர்யா தனக்கு தம்பி மாதிரி. அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வார்த்தைகளை அரசியல் காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர். அந்த ஆடியோவை மறந்திடுங்க” என்று தெரிவித்தார்.
அருவருக்கத்தக்க வகையில் தன்னை அசிங்கமாக பேசிய சூர்யாவை தனது தம்பி மாதிரி என்று டெய்சி கூறியது சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கலக்கும் கரகாட்டக்காரன் காமெடி!
மேலும் டெய்சியின் பேச்சை விமர்சித்து நெட்டிசன்கள் பலரும் இதுகுறித்து மீம்ஸ்களாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
அதிலும் கங்கை அமரன் இயக்கத்தில் உருவான கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி, கோவை சரளா, செந்தில் ஆகியோர் நடித்த காட்சியானது டெய்சியின் பேச்சால் தற்போது வைரலாகி உள்ளது.
அந்த காட்சியில், தனக்கு அல்வா கொடுக்கும் செந்திலை கோவை சரளா ”சின்ன பொடியன் எனக்கு தம்பி மாதிரிங்க” என்பார்.
அதற்கு செந்தில், “அண்ணே எனக்கு சகோதரி மாதிரி, தங்கச்சி!” என்று கூறுவார்.
நடுவில் நிற்கும் கவுண்டமனி, ”அப்படியாப்பா… அப்படியே இருந்தீங்கண்ணா.. நம்ம பார்ட்டிக்கும் நல்லது. உங்க உடம்புகளுக்கும் நல்லது. ஓடி போயிரு” என்று செந்திலை விரட்டுவார்.
இந்த காட்சியை தான் தற்போது டெய்சிக்கும், சூர்யாவுக்கும் பொருத்தியுள்ளனர். அதன்படி கோவை சரளாவை டெய்சியாகவும், செந்திலை சூர்யாவாகவும், இருவரையும் விரட்டும் கவுண்டமணியை அண்ணாமலையாகவும் மாற்றி இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் சொல்லும் ஒவ்வொரு வரியும், டெய்சி, சூர்யா சம்பவத்தில் பக்காவாக பொருந்தியுள்ள நிலையில் இந்த வீடியோ இணையத்தில் அதிரடியாக வைரலாகி வருகிறது.
1989ல் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற கரகட்டாக்காரன் திரைப்படத்தின் வசனம் எழுதி, இயக்கிய கங்கை அமரனும், இசையமைத்த இளையராஜாவும் தற்போது பாஜகவில் உள்ளனர் என்பது காலம் செய்த கோலம்.
கிறிஸ்டோபர் ஜெமா
ரூபி மனோகரன் சஸ்பெண்ட் நிறுத்திவைப்பு!
அஜித்துக்காக அய்யப்பனிடம் இப்படி ஒரு வேண்டுதல்!
காலம் செய்த கோலமா? எல்லாம் சுயநலம்.