நிறைய பேருக்கு சருமத்தில் பார்க்க சின்ன சின்ன புள்ளிகள் அல்லது பொரி போல இருக்கும். தொட்டுப் பார்க்கும்போது குட்டி வீக்கம் போல தோன்றும். இதுதான் மரு.
மரு பெரும்பாலும் கழுத்து, தொடை இடுக்கு போன்ற உடல் மடிப்புகளில் காணப்படும். சிலருக்கு முகத்திலும் வரலாம். இதைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை.
மரபணு, சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற காரணங்களால் மரு ஏற்படுகிறது. அழகைக் கெடுப்பதாக நினைத்துதான் பெரும்பாலான மக்கள் மருவை நீக்குகிறார்கள். சிலர் மருவால் வலி ஏற்படும்போது நீக்குகிறார்கள்.
`ரேடியோஃப்ரீக்வன்சி’ (Radiofrequency) மற்றும் `எலெக்ட்ரோஃபல்கரேஷன்’ (Electrofulguration) மூலம் மருவை எளிதாக நீக்கலாம்.
இவை இரண்டுமே வெப்பம் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள். இந்தச் சிகிச்சைக்கு வெறும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும்.
சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் உள்ளிட்டோர், ரத்தம் உறைதலைத் தடுக்கும் `பிளட் தின்னர்ஸ்’ மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்களாக இருக்கலாம். அப்படி எடுத்துக்கொள்வோர், இந்தச் சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் அது குறித்துச் சொல்ல வேண்டும்.
பல் சிகிச்சை, கேட்டராக்ட் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளின் போதும் பிளட் தின்னர்ஸ் எடுப்பவரா என சம்பந்தப்பட்டவரிடம் கேட்கப்படும். தேவைக்கேற்ப அந்த மாத்திரைகளை சில நாள்களுக்கு நிறுத்தவும் மருத்துவர் அறிவுறுத்துவார்.
வைரல் மரு என்பது `பாப்பிலோமா’ (Papillomavirus) எனப்படும் வைரஸால் ஏற்படும் தொற்று. இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
ஈரமான தரை மற்றும் கடினமான தரையில் நடப்பவர்களுக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. வைரல் மரு கை, கால், உதடு போன்ற பகுதிகளில் ஏற்படும். இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவும். உடலிலேயே ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பரவும்.
இதை நீக்கவேண்டியது மிக மிக அவசியம். சிலர் கைகளாலேயே பிய்த்து வைரல் மருவை அகற்றுகிறார்கள். இது தவறு.
இப்படிச் செய்தால் தொற்று அதிகம் பரவக்கூடும். `க்ரையோதெரபி’ (Cryotherapy) மற்றும் எலெக்ட்ரோஃபல்கரேஷன் மூலம் இதை நீக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்