பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா, இல்லையா என்கிற புராணச் சர்ச்சையைக் கேள்விப்பட்டிருப்போம். இந்த நிலையில் வீட்டிலேயே இந்த ஹென்னாவைத் தயாரித்துத் தடவிக் கொள்வதன் மூலம், முடிக்கு நல்ல கண்டிஷனைத் தருவதுடன், வளர்ச்சியையும் குளிர்ச்சியையும் நறுமணத்தையும் தரும் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள். அதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை இதோ…
மருதாணி பவுடர் – ஒரு கப், முட்டையின் வெள்ளைக்கரு – ஒன்று , டீ டிகாக்ஷன் – ஒரு கப், ஒரு எலுமிச்சைப்பழத்தின் சாறு… இவற்றுடன் மொட்டான முல்லை, ஜாதி, இருவாச்சி மல்லி மூன்றையும் அரைத்த விழுது ஒரு கப் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையைத் தலை முழுவதும் போட்டு, அரை மணி நேரம் கழித்து அப்படியே அலசலாம். முட்டை வாசனை மறைந்து பூக்களால் தலையில் நறுமணம் கமழும்.
மருதாணி இலை – ஒரு கப், கடுக்காய் தோல் – 4, டீ டிகாக்ஷன் – ஒரு கப், நல்லெண்ணெய் – ஒரு கப், துளசி இலை – ஒரு கப், கொட்டை நீக்கிய நெல்லிக்காய் இவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வாரம் ஒருமுறை தலையில், சிறிது நல்லெண்ணெய் தடவிவிட்டு, இந்த பேஸ்ட்டை தலை முழுவதும் போட்டு, ஒரு மணி நேரம் கழித்து அப்படியே அலசலாம். தலைமுடிக்கு நல்ல கண்டிஷனரையும், கலரையும், நறுமணத்தையும் கொடுப்பதுடன் பளபளப்பாக வைத்திருக்கும்.
ஃப்ரெஷ் பன்னீர் ரோஜா 100 கிராமுடன் மரிக்கொழுந்து, வெட்டிவேர், செண்பகப்பூ, துளசி தலா 50 கிராம் சேர்க்கவும். அடுப்பை ‘சிம்’மில் வைத்து தேங்காய் எண்ணெய்விட்டுக் காய்ச்சி, பூக்களை அதில் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயைத் தினமும் தடவினால், தலை முடி பளபளக்கும். கூந்தல் வாசனை மனதை மயக்கும். ஃப்ரெஷ்னெஸை உணர முடியும். How to Make Henna Paste