பிரதமர் அலுவலக அதிகாரிகள் போல் நடித்து இசட் பிளஸ் பாதுகாப்புடன் வலம் வந்த குஜராத் சேர்ந்த ஒரு மோசடி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்தவர் கிரண் பாய் பட்டேல். இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு முறை ஜம்மு காஷ்மீருக்கு சென்றுள்ளார். அப்போது தன்னை பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரி என்று அங்குள்ள காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கிரண் பட்டேலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு, குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி காரில் பயணம், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதிகாரப்பூர்வ தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளும் கிடைத்துள்ளன.
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களுக்கும் சகல வசதிகளுடன் கிரண் படேல் பயணம் செய்தார். இந்நிலையில் தூதபத்திரியை சுற்றுலா தலமாக்குவது குறித்து அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தான் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் உளவுத்துறையின் தகவலின் பேரில் மோசடி ஆசாமி கிரண் பட்டேலை ஜம்முகாஷ்மீர் போலீசார் கைது செய்தனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிரண் படேல் கைது செய்யப்பட்டதை போலீசார் ரகசியமாக வைத்திருந்த நிலையில் தற்போது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
அதேவேளையில் போலி அதிகாரி என்று கண்டுபிடிக்க தவறிய ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
ட்விட்டரில் பிரபலமாக இருக்கும் கிரண் பட்டேலை, குஜராத் மாநில பாஜக பொதுச் செயலாளர் பிரதீப்சிங் வகேலா உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கின்றனர்.
இதற்கிடையே கைதாகியுள்ள கிரண் பட்டேல், தனது டிவிட்டர் முகப்பு பக்கத்தில் ஐஐஎம் திருச்சியில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா