பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ’சடிவாரா’ என்ற கிராமத்தில் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளது. இதனை பார்த்த அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர் பரூக் அகமது தன்னுடைய கிராமத்தை எப்படி பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து மீட்பது என்று யோசனை செய்துள்ளார்.
அதன்பலனாக அவருக்கு கிடைத்த அந்த யோசனை தான் இப்போது ’சடிவாரா’ கிராமத்தை பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக மாற்றியுள்ளது.
அப்படி என்ன செய்தார் என்று யோசிக்கிறீர்களா…’பிளாஸ்டிக் தோ அவுர் சோனா லோ’ (GIVE PLASTIC,TAKE GOLD) என்ற திட்டம் தான் அது. ’பிளாஸ்டிக் கழிவுகளை கொடுங்கள்… தங்கம் வாங்கிச் செல்லுங்கள்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், 20 குவிண்டால் பிளாஸ்டிக் கழிவுகளை யாராவது கொடுத்தால், பஞ்சாயத்து அவருக்கு தங்க நாணயம் வழங்கும். பிரசாரம் தொடங்கிய 15 நாட்களில் கிராமம் முழுவதும் பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக உருவாகியுள்ளது. இதற்கு தற்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதைப் பார்த்து அருகில் உள்ள பல ஊராட்சிகளும் இதனை பின்பற்ற முன்வந்துள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்