பாய்ந்து செல்லும் நீருக்கு நடுவே நின்று புகைப்படம் எடுக்க முயன்ற தந்தையும், மகனும் இழுத்துச் செல்லப்படும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தும்கூரு மாவட்டத்தில் கெரே குடி கிராமத்தில் உள்ள கொள்ளூ ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஏரியில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் பாய்ந்து ஓடும் அழகான காட்சியை காண்பதற்காக பொதுமக்கள் பலர் அங்கு கூடி வருகின்றனர். இன்று(ஆகஸ்ட் 6) காலை ஒரு தந்தை தனது மகனுடன் ஏரி நீர் வெளியேற்றத்தில் குளித்துக் கொண்டு இருந்தார்.

அதனை அவரது உறவினர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். புகைப்படம் எடுப்பதற்காக மகனை பின்னால் நிற்க வைத்த நிலையில் திடீரென வெள்ளத்தில் சிறுவன் இழுத்து செல்லப்பட்டான். அவனை காப்பாற்ற முயன்ற தந்தையும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சென்று அவர்களை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இரண்டும் பேரும் உயிர் தப்பினர்.
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளம் குட்டைகளும் நிறைந்துள்ள நிலையில் அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் அதிகம் செல்லும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று எச்சரித்து வரும் வேளையிலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன.
–கலை.ரா
குழந்தையை கொல்லும் தாய்: பதைபதைக்க வைக்கும் வீடியோ!