உலகளவில் பாதுகாப்பாக மின்னஞ்சலை அனுப்பவும், பெறவும் கூகுளின் ஜிமெயில் முன்னணி தளமாக உள்ளது. பிற சமூக ஊடக தளங்களில் செயல்படுவதற்கும் ஜிமெயில் அத்தியாவசிய ஆதாரமாக பயன்படுகிறது.
உலகளவில் சுமார் 30 கோடி நிறுவனங்களும், 100 கோடிக்கு அதிகமான தனி நபர்களும் ஜிமெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஜிமெயில் நிறுத்தப்பட உள்ளது என்று கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமற்ற செய்தி வெளியானது.
உலகளாவிய சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்த ஜிமெயில் நிறுத்தப்படும் என்ற தகவல் பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் சமூக வலைதளங்களான எக்ஸ், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் ஜிமெயில் டிரெண்டிங்கில் வந்தது.
இந்த நிலையில் ஜிமெயில் நிறுத்தப்படும் என்ற தகவல் வதந்தி என்பதை ‘ஜிமெயில் இங்கு தான் உள்ளது’ என்று கூகுள் இன்று(பிப்ரவரி 23) அதிகாரப்பூர்வமாக அறிவித்து பயனர்களின் அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Gmail is here to stay.
— Gmail (@gmail) February 22, 2024
எனினும் இதில் பாதி உண்மையும் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. அதாவது, ஜிமெயிலில் ‘HTML view’ இந்தாண்டில் முழுவதுமாக நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக ‘Standard View’ என்ற மேம்பட்ட பதிப்பை கூகுள் ஏற்கெனவே அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பயனர்களுக்கு ‘நீங்கள் ஜிமெயிலில் HTML வியூ பயன்படுத்தினால், ஸ்டாண்டர்ட் வியூ பதிப்பிற்கு மாற்ற எங்கள் வழிகாட்டியைப் படிக்கவும்” என்று ஜிமெயில் நிறுவனம் உதவிப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு தான் ’ஜிமெயில் முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது’ என்ற வதந்தியாக மாறியிருக்கலாம் என்றும், இந்த சின்ன மாற்றத்தை தவிர ஜிமெயில் எப்போதும் போல எதிர்காலத்தில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜிமெயில் பயனர்களின் வசதிக்காக AI அம்சங்களை உட்புகுத்துவதில் கூகுள் தற்போது தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எடப்பாடிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஏ.வி.ராஜூ
தேர்தல் ஆணையர் ஆலோசனை : அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் என்ன?