மழை மற்றும் குளிர்காலங்களில் மாலை நேர சிற்றுண்டியாக என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த சோள ரவை – உப்புமா கொழுக்கட்டை. அனைவருக்கும் ஏற்ற இந்த கொழுக்கட்டை குளிர்காலத்துக்கேற்றது; ஆரோக்கியமானது.
என்ன தேவை?
சோள ரவை – ஒரு கப்
துவரம்பருப்பு – கால் கப்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
காய்ந்த மிளகாய் – 3
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
விருப்பமான காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி, பீட்ரூட் மாதிரி) – கால் கப் (நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் – கால் கப்
நல்லெண்ணெய் – சிறிது
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் சோள ரவையை வறுக்கவும். துவரம்பருப்பை மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, நறுக்கிய இஞ்சி, காய்கறிக் கலவை, உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிவந்ததும் பெருங்காயத்தூள், உடைத்த துவரம்பருப்பு, வறுத்த சோள ரவை, சிறிது தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி, கலவை பாதி வெந்த நிலையில் அடுப்பை அணைக்கவும். கைப்பொறுக்கும் சூட்டில் மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
இட்லித் தட்டில் வாழை இலை போட்டு நல்லெண்ணெய் தடவி, கொழுக்கட்டைகளை வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு, மீதமுள்ள தேங்காய்த் துருவலில் புரட்டி எடுத்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…