ஸ்மார்ட் வாட்ச் போன்று செயல்படும் ஸ்மார்ட் மோதிரத்தை சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி உதவி மையம் (இங்குபேஷன் செல்) மூலம் சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்களை கொண்டு ‘மியூஸ் வியரபிள்’ ஸ்டாா்ட் அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கெனவே ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்து, இந்தியா உள்பட 30 நாடுகளில் அதனை விற்பனை செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது ஸ்மாா்ட் வாட்ச் போன்று, மோதிர வடிவ தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்த ஸ்மார்ட் ரிங்கை பயன்படுத்தி 24 மணி நேரமும் உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க முடியும். ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, உடல் வெப்பநிலை ஆகியவற்றை தெரியப்படுத்தும்; ஸ்மாா்ட் வாட்சை விட 10 மடங்கு எடை குறைவானது.
தொடர்ச்சியாக 24 மணி நேரமும் பயன்படுத்தினாலும் ஸ்மார்ட் ரிங் பேட்டரி 7 நாட்களுக்கு நீடிக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
உடல் ஆரோக்கியத்தை கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், இதன் மூலம் பணம் செலுத்துவதற்கான வசதியும் இந்த தொழில்நுட்பத்தில் புகுத்தப்பட்டு இருக்கிறது.
இதற்காக மாஸ்டா் காா்டு, விசா, ரூபே போன்ற கட்டண நெட்வொா்க்குடன் ‘மியூஸ் வியரபிள்’ நிறுவனம் கூட்டு சேர்ந்து இருப்பதாக சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்கள் கே.எல்.என்.சாய்பிரசாந்த், கே.ஏ.யஜீந்திர அஜய் ஆகியோர் தெரிவித்தனர்.
‘மேக் இன் இந்தியா’ பிரசாரத்தின் உதாரணமாக, இந்த ‘ஸ்மாா்ட் ரிங்’ முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி இந்த ஸ்மார்ட் ரிங் உலகளவில் வெளியிடப்பட உள்ளது. இந்தியாவில் வரும் 25 ஆம் தேதி முதலே விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
உடல் ஆரோக்கியம், பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை ஒரு சின்ன மோதிரத்திற்குள் வைத்திருப்பது விஞ்ஞான உலகின் மீதான வியப்பை மக்களுக்கு அதிகரித்துள்ளது.
மோனிஷா