புரட்டாசி மாதத்தில் ஒருவேளை உணவு மட்டும் எடுத்துக்கொள்வோம். தினமும் இரவில் பழங்கள் அல்லது சூப் மட்டுமே சாப்பிடுவோம் என்று எடைக் குறைப்புக்கு இது உதவும் என்று நினைத்து அதைப் பின்பற்றுவோர் பலருண்டு.
அது சரியான பழக்கமா? ஊட்டச்சத்து ஆலோசகர்களின் பதில் என்ன?
“முறையான நிபுணர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் பலரும் எடையைக் குறைக்கும் எண்ணத்தில் இப்படிப் பல விஷயங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள்.
இரவு உணவுக்கு வெறும் பழங்களோ, சூப்போ, அளவு குறைவான உணவுகளையோ எடுத்துக்கொள்ளும்போது அவற்றில் புரதச்சத்து இல்லாத பட்சத்தில், நள்ளிரவில் உங்களுக்குப் பசி உணர்வு எற்படும். அதன் காரணமாக உங்கள் தூக்கமும் பாதிக்கப்படும்.
அது மட்டுமன்றி நள்ளிரவுப் பசியின் காரணமாக அந்த நேரத்தில் நீங்கள் எதையாவது சாப்பிட முனைவீர்கள். அவை ஆரோக்கியமற்ற உணவுகளாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் சூப்பும் பழங்களும் எடுத்துக்கொண்டதன் பலனே வீணாகிப்போகும்.
சூப்பும் பழங்களும் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகள். எனவே, நள்ளிரவில் ஏற்படும் பசி உணர்வைக் கட்டுப்படுத்தவும், தூக்கம் பாதிக்கப்படாமலும் இருக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவதுதான் சிறந்தது. அதிலும் குறிப்பாக, நீங்கள் எடைக்குறைப்பு முயற்சியை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்தால், இரவில் சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியம்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை கலோரிகள் எடுத்துக்கொள்கிறீர்கள், அதை அந்த நாள் முழுவதும் எப்படி எரிக்கிறீர்கள், அதிலும் பசி உணர்வு இல்லாமல் என்பது தான் முக்கியம். அதுதான் எடைக்குறைப்புக்கும் உதவும்.
எனவே, எடைக்குறைப்பு முயற்சியைத் தொடங்கும் முன் சரியான நிபுணரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையோடு உங்களுக்கான உணவுத்திட்டத்தைக் கேட்டறிந்து பின்பற்றுவதுதான் சரி” என்று விளக்கமளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: சமையலுக்கு ஏற்றது பெரிய வெங்காயமா? சின்ன வெங்காயமா?
மணிமேகலை யார்?: அப்டேட் குமாரு