இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,36,12,950 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (ஜனவரி 6) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “01.01.2025- தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2025-ன் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 29.10.2024 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/ நீக்க/ திருத்த/ இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 29.10.2024-ஆம் தேதியிலிருந்து 28.11.2024-ஆம் தேதி வரை பெறப்பட்டன.
மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 14,02,132 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 13,80,163 விண்ணப்பங்கள் (ஆண்கள் 6,18,383, பெண்கள் 7,61,483, மூன்றாம் பாலினத்தவர் 297) ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பெயர் நீக்கலுக்காக 5,16,940 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 4,97,800 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி (3,72,872), இறப்பு (1,09,131) மற்றும் இரட்டைப் பதிவு (15,797) ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன.
மேலும், 2,15,244 வாக்காளர்களின் பதிவுகளில் (ஆண்கள் 1,13,399; பெண்கள் 1,01,750; மூன்றாம் பாலினத்தவர் 95) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,36,12,950 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,11,74,027; பெண் வாக்காளர்கள் 3,24,29,803 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 9,120 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது.
இத்தொகுதியில் மொத்தம் 6,90,958 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,45,184; பெண்கள் 3,45,645; மூன்றாம் பாலினத்தவர் 129). இதற்கு அடுத்தப்படியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 117-கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,91,143 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,43,839 ; பெண்கள் 2,47,153; மூன்றாம் பாலினத்தவர் 151).
மாறாக, தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164-கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,76,505 ஆவர். (ஆண்கள் 86,456; பெண்கள் 90,045; மூன்றாம் பாலினத்தவர் 4)
இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 18-துறைமுகம் சட்டமன்ற தொகுதி உள்ளது.
இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,78,980 ஆவர் (ஆண்கள் 92,615 ; பெண்கள் 86,296 ; மூன்றாம் பாலினத்தவர் 69).
இறுதி வாக்காளர் பட்டியலில் 3,740 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. வாக்காளர் பட்டியலில் இதுவரை, 4,78,007 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின்போது, பெயர் சேர்த்தலுக்காக பெறப்பட்ட மொத்தப் படிவங்களில், 18-19 வயதுள்ள 4,10,069 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அந்த மாணவிக்காக… முருகனிடம் உருகிய சிவகார்த்திகேயன்
எடப்பாடியின் லஞ்ச் பேக்கில்… எட்டாய் மடித்து… சட்டமன்றத்தில் அதிமுக செய்த சம்பவம்!