அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வரும் ஏப்ரல் 15ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 9 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், அவரை கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.
தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 15 வரை நீதிமன்ற காவலில் அடைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்று தெரிவித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுவர்ண காந்தா, போதுமான ஆதாரங்களின் அடிப்படையில் தான் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தெரிவித்தார்.
இந்நிலையில் தன்மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
கெஜ்ரிவாலின் வழக்கறிஞர்களான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, வழக்கறிஞர் ஷதன் ஃபராசத் ஆகியோர் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் அமர்வு, ஏப்ரல் 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது.
ஏப்ரல் 11 மற்றும் ஏப்ரல் 12 ஆகிய தேதிகளில் நீதிமன்ற விடுமுறை. இந்நிலையில் வரும் திங்கள் கிழமை ஏப்ரல் 15ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 13) தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டது. அன்றைய தினம் 57ஆவது வழக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் பறிமுதல் செய்தது என்ன?: ED விளக்கம்!