இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கர் விருது, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை ஏ.ஆர்.ரகுமான் வென்றுள்ளார். கடந்த ஆண்டு தனது மனைவி சாய்ரா உடனான திருமண பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். ar rahman admitted hospital
சமீபத்தில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இவரது இசையமைப்பில் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கழுத்து வலி காரணமாக ஏ.ஆர்.ரகுமான் இன்று காலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர்.ரகுமான் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், ஏ.ஆர்.ரகுமான் உடல் நலன் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.