தமிழகத்தில் 19% ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாயிகளிடம் வாங்கப்படும் நெல்லுக்கு, மத்திய, மாநில அரசுகளின் சார்பில் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் நெல் கொள்முதல் சீசன் செப்டம்பர் 1ல் துவங்கியது. இந்த சீசனில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.

ஆனால் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த ஆண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்திட வேண்டும் என்று மத்திய அரசின் உணவு மற்றும் பொது வினியோக திட்ட துறை செயலருக்கு, தமிழக கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியிருந்தார்.
தற்போதுள்ள சூழலில் 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யவேண்டும் என்று அவர் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார்.
இதைதொடர்ந்து, இந்திய உணவு கழக தரக் கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குனர் கான் தலைமையிலான குழு, டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்தது.
அதனடிப்படையில் தற்போது மத்திய அரசு 19% ஈரப்பத நெல் கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
கலை.ரா