டிசம்பரில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சாதி, மதம், இனம் என மக்களைப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்பேன் என்று பேசிய அக்கட்சித் தலைவர் விஜய் பேசியது திமுக கூட்டணி மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் விஜய் மாநாட்டை ஆதரித்து வாழ்த்துகள் தெரிவித்திருந்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதைத்தொடர்ந்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்கும் என்று செய்திகளும் பரவியது.
இதுபோன்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தவெக தலைவர் விஜய்யின் ஆலோசனைப்படி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ‘அதிமுகவுடன் கூட்டணி இல்லை’ என்று அறிக்கை வெளியிட்டார்.
இந்தநிலையில் தவெக அடுத்தக்கட்டம் செல்வதற்கு மூன்று சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என 78 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க ஆலோசனை செய்து வருகிறார் விஜய் என்கிறார்கள் தவெக வட்டாரத்தில்.
“இந்த தேர்வில் புதிய ஆட்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்க விஜய்க்கு நம்பிக்கையான ஒரு டீம் ஆலோசனை கொடுத்து வருகிறது.
ஆனால் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ரசிகர் மன்றம், நற்பணி மன்றம், விஜய் மக்கள் இயக்கம் என 25 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து, நம்பிக்கையுடன் பயணித்து வரும் நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கலாம் என்று ஆலோசனை கூறி வருகிறார்.
அரசியல் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல விஜய்க்கு ஆலோசகராக இருக்கக்கூடிய ஐ.எப்.எஸ் அதிகாரி ஒருவர் உட்பட சிலர், ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு போதுமான அரசியல் அனுபவம் இருக்காது. அதனால் அவர்களுக்கு கட்சி அணிகளில் 50 சதவிகிதம் பொறுப்பு கொடுத்துவிட்டு, வெளியில் இருந்து வரக்கூடிய அரசியல் அனுபவமுள்ளவர்களுக்கு 50 மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கலாம் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.
இந்தநிலையில் டிசம்பர் முதல் வாரத்தில் புதிய மாவட்ட செயலாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளார் விஜய். அதன்பிறகு புத்தாண்டில் இருந்து 234 தொகுதிகளிலும் கொடி ஏற்றுவது, மாவட்டம் தோறும் அரசியல் கூட்டம் நடத்துவது என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டுள்ளார் விஜய்.
புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிப்புக்கு பிறகு உட்கட்சிக்குள் சில சில சலசலப்புகளும் ஆதரவுகளும் வரத்தான் செய்யும்” என்கிறார்கள் தவெக மூத்த நிர்வாகிகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
பேராசிரியர்கள் மறுநியமனத்தை நீட்டித்து உத்தரவு!
திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து இருவர் பலி! – வன அலுவலர் கூறியது என்ன?