தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக, தமிழ்நாடு அரசு மீது மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் ஹென்றி திபேன் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
உச்சநீதிமன்றமானது பிரகாஷ் சிங் வழக்கில் வழங்கிய தீர்ப்பில், “மாநில டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக, அந்த பதவிக்கு தகுதியான அதிகாரிகள் பட்டியலை மத்திய அரசுக்கு மாநில அரசு அனுப்பி வைக்க வேண்டும்; இந்த பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி ஆய்வு செய்யும். இதன் பின்னர் இப்பட்டியலில் இருந்து டிஜிபி பதவிக்கான 3 பேரை மாநில அரசுக்கு மத்திய அரசு பரிந்துரைக்கும். இதனடிப்படையில் மாநிலத்தின் புதிய டிஜிபி நியமிக்கப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தது. இதனையே டிஜிபிக்கள் நியமனத்தில் மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன.
தமிழகத்தில் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் தமிழக அரசின் பட்டியல், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதால் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிராக, பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில், பொறுப்பு டிஜிபி நியமனத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன் சார்பில் அவரது வழக்கறிஞர் பிரசன்னா, உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். உச்சநீதிமன்றம், பிரகாஷ் சிங் வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பொறுப்பு டிஜிபியை தமிழக அரசு நியமித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
