தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அந்தியூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அந்தியூர் பகுதிகளில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகளவு கனமழை பெய்துள்ளது.
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பி வழிகிறது.
கனமழை காரணமாக அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிச் சமுத்திரம் ஏரி, எண்ணமங்கலம் ஏரி, கரும்பாறைபள்ளம் ஏரி, தண்ணீர் பள்ளம் ஏரி, வேம்பத்தி ஏரி, பிரம்மதேசம் ஏரி ஆகிய 7 ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளன. அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்தியூர் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அந்தியூர் முழுவதும் நீரில் மூழ்கி ஒரு தனித் தீவு போல் காட்சியளிக்கிறது.

குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்தியூர் மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்தியூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 17) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உன்னி உத்தரவிட்டுள்ளார்.
மோனிஷா
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
பட்டாசு கடைகளுக்கு விரைவாக அனுமதி வழங்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு!