“பணம் கொடுக்காமல் தேர்தலை நேர்மையாக சந்தித்ததால், நாம் தமிழர் கட்சியை பாராட்டுகிறேன்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 5) தெரிவித்துள்ளார்.
சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “பாஜக தனித்து பெற்ற வாக்குகள் நாம் தமிழரை விட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்து விடுவேன்” என்று சீமான் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “நாம் தமிழர் கட்சியை இந்த நேரத்தில் நான் பாராட்டுகிறேன். காரணம், எங்களுக்கும் அவர்களுக்கும் அரசியல் சித்தாந்த ரீதியாக கடுமையான வாக்குவாதங்கள் நடந்தாலும், நேர்மையாக இந்த களத்தில் அவர்கள் நின்றிருக்கிறார்கள்.
பணம் கொடுக்காமல் தேர்தலை சந்தித்திருக்கிறார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். ஒரு அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்கள்.
கூட்டணியில் இல்லாமல் புது சின்னத்தில் நின்றிருக்கிறார்கள். திராவிட கட்சிகளில் இருந்து தமிழக மக்கள் வெளியே வர ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது நாம் தமிழர் கட்சியும் சொல்கிற செய்தி. எனவே, இந்த நேரத்தில் அவர்களை குறை சொன்னால், எனது கடமையை நான் தவறாக செய்வதாக அர்த்தம்.
அதனால் நாம் தமிழர் கட்சி களத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று நானும் பார்த்தேன். அவர்களை பொறுத்தவரை அவர்களது சித்தாந்தத்தை மக்கள் முன்னால் வைக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சியையும் பாஜகவையும் ஒப்பிட்டு யாரும் போட்டி ஏற்படுத்த வேண்டாம். அவர்களுடைய பாதையில் அவர்கள் பயணிக்கிறார்கள். எங்கள் பாதையில் நாங்கள் பயணிக்கிறோம்.
பாஜக அதிக ஓட்டு வாங்கி விட்டோம். சீமான் அண்ணன் கட்சியை கலைப்பாரா என்று நாங்கள் கேட்க விரும்பவில்லை.
ஆனால், நாம் தமிழர் கட்சி நேர்மையாக இந்த அரசியலில் நின்றிருக்கிறார்கள். தமிழக அரசியலில் நேர்மையாக வாக்கு வாங்கியிருக்கிறார்கள். அதை இந்த நேரத்தில் நான் பாராட்டுகிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் ஜில் வெதர் – வானிலை மையம் குளுகுளு அப்டேட்!
தேர்தல் வெற்றி: ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஐஏஎஸ் அதிகாரிகள்!
