அறிஞர் அண்ணா குறித்து பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 15). அவரது உருவச்சிலைக்கும் உருவ படங்களுக்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னையில் அறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற சூழலில் கூட்டணிக் கட்சி என்ற முறையில் சந்திப்பது என்பது காலம்காலமாக இருக்கின்ற நடைமுறைதான். அதன் அடிப்படையில் தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை குறித்து கேட்டதற்கு, “அமலாக்கத்துறை அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க தான் வேண்டும். அந்த வகையில் அமலாக்கத்துறை அவர்களது கடமையை தான் செய்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அண்ணாமலை அறிஞர் அண்ணா குறித்து பேசியதை அதிமுக எப்படி பார்க்கிறது என்ற கேள்விக்கு, “அதிமுக தொண்டர்கள் அனைவரும் கொதித்து எழுந்திருக்கின்ற நிலைதான். அண்ணாமலையை பொறுத்தவரை அவருடைய கட்சியை வளர்ப்பதற்கு என்ன வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துகின்ற வழக்கத்தை கைவிட வேண்டும்.
அவரை பொறுத்தவரை ஏற்கனவே ஜெயலலிதா குறித்து பேசி, அதனால் கண்டனங்கள் எழுந்ததால் மன்னிப்பு கேட்டார். மறைந்த பேரறிஞர் அண்ணா இன்று இல்லை என்றாலும் உலக தமிழர்களால் போற்றப்படுகின்ற மாபெரும் தலைவர்.
அவரை கொச்சைப்படுத்துகின்ற வகையில் நடக்காத ஒரு சம்பவத்தை பேசியுள்ளார். அறிஞர் அண்ணாவும் முத்துராமலிங்க தேவரும் நெருங்கிய நண்பர்கள். அதிமுக ஆட்சி காலத்தில் தான் முத்துராமலிங்க தேவரை நினைவுபடுத்தும் பல்வேறு உத்தரவுகள் போடப்பட்டது.
ஆனால் அண்ணாமலை எந்த புத்தகத்தில் படித்தார்? உடனே அண்ணாவை குறித்து ஒரு தவறான கருத்தை சொன்னால் நிச்சயமாக எந்த தொண்டனும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டான். அதனால் பேரறிஞர் அண்ணாவை பற்றி பேசியதற்கு அண்ணாமலைக்கு எங்களது கண்டனத்தை தெரிவிக்கிறோம். இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
இனிமேல் இதுபோன்று பேசினால் பதிலடி கொடுக்க வேண்டிய சூழ்நிலை நிச்சயமாக அண்ணாமலைக்கு ஏற்படும். ஏனென்றால் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்திப் பேசக் கூடாது. இவர் (அண்ணாமலை) பக்கத்தில் இருந்து பார்த்தது போல எப்படி நடக்காத ஒரு விஷயத்தை சொல்ல முடியும்” என்று கண்டனம் தெரிவித்தார்.
தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் திமுகவின் 100 சதவீத வாக்குறுதிகள் நிறைவேறி விட்டதாக முதல்வர் சொல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “இது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய். நாடே பற்றி எரிகிறது. கிராமங்களில் இன்றைக்கு அடிப்படை வசதிகள் இல்லை. டெங்கு காய்ச்சல் கடுமையாக பரவிக் கொண்டிருக்கிறது.
பால் விலை, மின் கட்டணம், பத்திரப் பதிவு கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை உயர்த்தி விட்டு ஒவ்வொரு தமிழ்நாட்டின் குடிமகனின் முதுகில் பெரிய சுமையை ஏற்றி வைத்துள்ளார்கள். ஆனால் 1,000 ரூபாயை கொடுப்பது யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல உள்ளது.
2 கோடி பேருக்கு கொடுப்பதாக சொன்னீர்கள் கொடுக்கவில்லை. ஆனால் விண்ணப்பித்த ஒன்றரை கோடி பேருக்காவது கொடுக்கலாமில்லையா? அந்த ஒன்றரை கோடியில் 56 லட்சம் பேருக்கு கொடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.
மோனிஷா
சனாதன பேச்சு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!