annamalai urge withdraw police suspend
சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் மீதான பணியிடை நீக்க நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஜனவரி 3) வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது, மொபைலில் மிஸ்டு கால் கொடுத்து பாஜக உறுப்பினராக சேர்வதற்கான முகாம் அமைக்கப்பட்டிருந்தது. நடைபயணத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் மிஸ்டு கால் கொடுத்து பாஜகவில் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
போலீஸ் சீருடையுடன் காவலர்கள் இருவரும் பாஜகவில் உறுப்பினர்களாக சேர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை தொடர்ந்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோரை நாகை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில், இரண்டு சிறப்பு உதவி காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து தஞ்சாவூர் சரக டிஐஜி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினத்தில் நடந்த என் மண் என் மக்கள் நடைபயணத்தின்போது, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டதாகக் கூறி, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக காவல்துறை.
என் மண் என் மக்கள் நடைபயணத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் சாதனை குறித்த விவரங்களையும், பிரதமர் மோடியின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த விவரங்களையும் துண்டறிக்கைகள் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்வதும், மேலும், தமிழக பாஜகவில் இணைய விருப்பமுள்ளோருக்கு உதவவும், பாஜக சகோதர சகோதரிகள் ஆங்காங்கே சிறு தளங்கள் அமைத்திருப்பது வழக்கம்.
குறிப்பிட்ட தினத்தன்று, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இருவரும், அந்தப் பகுதியில் என்ன நடைபெறுகிறது என்பதைக் குறித்து விசாரித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் இருவரும் கட்சியில் உறுப்பினர்களாக இணைந்து விட்டார்கள் என்ற தவறான தகவலை, அந்தப் பகுதியில் இருந்து பிறர் பரப்பியதன் அடிப்படையில், இருவர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக நான் விசாரித்ததில் தெரிய வந்துள்ளது.
தமிழகக் காவல்துறையினரைப் பொறுத்தவரை, உலக அளவில் எந்த நாட்டுக் காவல்துறையினருக்கும் சற்றும் குறைவில்லாத திறமையுடையவர்கள். பொதுமக்களைக் காக்கும் பணியில் ஓய்வு, உறக்கமின்றி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறவர்கள்.
இயற்கைப் பேரிடர்கள் காலத்தில் கூட தன்னலமின்றி களத்தில் இறங்கிப் பணியாற்றுகிறவர்கள் என்பதை சமீபத்திய சென்னை மற்றும் தென்மாவட்ட கனமழை நேரத்தில் கூட கண்டோம். தமிழகக் காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டிராவிட்டால், தமிழகம் நிச்சயம் ஒரு அமைதிப் பூங்காவாக நிலவும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஆனால், பல்வேறு அரசியல் காரணங்களால், அதிகாரத்தில் இருப்பவர்களின் அழுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்படுவது, கீழ்மட்ட நிலையிலுள்ள காவல்துறை சகோதரர்களே.
பொதுமக்கள் கூட்டமாக இருக்கும் பகுதியில், காவல்துறையினர் விசாரிப்பது என்பது வழக்கமான நடைமுறை. ஆனால், அதற்காக, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்களை, எந்த விசாரணையும் இன்றி பணியிடை நீக்கம் செய்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
இரு உதவி ஆய்வாளர்களை மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினரையும், அவர்களைச் சார்ந்தவர்கள் அனைவரையுமே இந்த நடவடிக்கை பாதிக்கும்.
பல கனவுகளோடு சீருடை அணிந்து, இத்தனை ஆண்டுகளாகத் தங்கள் கடமையில் சிறிதும் தவறாது பொதுமக்களுக்காக உழைத்தவர்களுக்குக் கிடைக்கும் பரிசு, பணி நீக்கம் என்றால், இளைஞர்கள் நாளை காவல்துறைப் பணியில் சேர எப்படி முன்வருவார்கள்?
காவல்துறை சகோதரர்கள் மீதான இது போன்ற கடுமையான நடவடிக்கைகள், இளைஞர்களிடையே காவல்துறைப் பணிக்கான வேட்கையே அற்று விடும்.
பல ஆண்டுகளாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த தங்கள் பணிகளைத் திறம்படச் செய்து கொண்டிருக்கும் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இரு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மீதான இந்த பணியிடை நீக்க நடவடிக்கை மிக அதிகபட்சமானது என்பதால், தஞ்சை சரக மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள், தயவு செய்து இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்” என்று கேட்டுக் கொள்கிறேன்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
எதிர்க்கட்சிகளுக்கு சர்க்கரை பொங்கல்: அப்டேட் குமாரு
இந்தியாவில் 7 கோடி வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்…என்ன காரணம்?
annamalai urge withdraw police suspend