இனிமே கலாய்க்கப் போறாங்க: அண்ணாமலை செல்ஃபி வித் கார்த்தி

Published On:

| By christopher

விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்துடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்துள்ள செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில் திமுக காங்கிரஸ் கட்சியினர் இடையே புகைச்சல் கிளம்பியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக சிவகங்கையில் நின்று வெற்றி பெற்றவர் கார்த்தி பி சிதம்பரம்.

இவர் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரத்தின் மகன் ஆவார். மனதில் பட்டதை அப்படியே பேசிவிடும் கார்த்தி சிதம்பரம், அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு.

கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்ற ஆசியக்கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தது.

அப்போது அரங்கில் இருந்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தேசியக் கொடியை பிடிக்க மறுத்துவிட்டார்.

இதனை நேரலை காட்சியாக பல கோடி மக்கள் பார்த்த நிலையில் உள்ளூர் அரசியல்வாதிகள் முதல், தேசிய எதிர்கட்சி தலைவர்கள் வரை பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அப்போது ஜெய்ஷாவுக்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் செய்த ட்வீட் பதிவு அவரது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் நடந்த செருப்பு வீச்சு சம்பவம் தொடர்பாக அப்போது பேசிய கார்த்தி சிதம்பரம், “தமிழக நிதி அமைச்சர் சொல்லும் புள்ளி விவரம் மத்திய நிதி அமைச்சருக்கு எரிச்சலை மூட்டுகிறது.

மத்திய அமைச்சர் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் புள்ளி விவரங்களால் மட்டுமே பதில் சொல்ல வேண்டும்.

அது முடியாததால் தான் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசியக்கொடி கட்டிய காரின் மீது காலணி வீசியது அநாகரீகம். இந்தச் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.” எனத் தெரிவித்து இருந்தார்.

நேற்று தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை இருவருக்கும் இடையே டிவிட்டரில் கடும் வார்த்தை போர் ஏற்பட்டது.

இதனையடுத்து சமூகவலைதளங்களில் திமுக, பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் சீமான் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அண்ணாமலையின் பேச்சை கண்டித்து கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 1) கோவை பயணத்தின்போது சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்பாராத விதமாக சந்தித்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட செல்பி புகைப்படத்தை அவருடன் பயணம் செய்த திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இரு துருவங்களுடன் கோவை விமானப் பயணம்’ என்று சொல்லி வெளியிட்டிருந்தார்.

அதனை கார்த்தி சிதம்பரம் ரீட்விட் செய்து, “இனிமே உன்னை கலாய்க்கப் போறாங்க” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திமுக பாஜகவினர் இடையே காரசார மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி ஒருவர் கூலாக சிரித்தபடி அண்ணாமலையுடன் எடுத்த செல்பி இரு கட்சியினர் இடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது..

கிறிஸ்டோபர் ஜெமா

கண்ணியமாகத்தான் பேசவேண்டுமெனில் பாஜக தலைவர் பொறுப்பே வேண்டாம்: அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share