தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
இந்தநிலையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் வேட்டி, சேலை தொகுப்பில் ஊழல் நடந்துள்ளதாகவும், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளிக்க உள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 10) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில், வழக்கமாகப் பயன்படுத்தி வந்த பருத்தி நூலின் அளவைக் குறைத்து விட்டு, விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் நடந்திருக்கிறது என்று, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி மீது குற்றச்சாட்டு வைத்திருந்தோம். அதற்கு அவர் 2003 ஆம் ஆண்டு அரசாணையை மேற்கோள் காட்டி, மக்களைத் தவறாகத் திசைதிருப்புகிறார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு அரசாணையின்படி, வேட்டியில் வெஃப்ட் பகுதி நெய்ய பாலியஸ்டர் நூலை பயன்படுத்தலாம்.
ஆனால், வார்ப் பகுதியை நெய்ய கடந்த ஆண்டு வரை 100 சதவிகிதம் பருத்தி நூல் தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு, வார்ப் பகுதி நெய்யவும், விலை குறைவான பாலியஸ்டர் நூலை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஒரு கிலோ ரூ.320 வரை விற்கப்படும் பருத்தி நூலைப் பயன்படுத்தாமல், வேண்டுமென்றே, அதில் பாதி விலையான ரூ.160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வார்ப் பகுதியை நெய்திருக்கிறார்கள்.
ஒரு வேட்டியில், 78 சதவிகிதம் பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் நாங்கள் சோதனை செய்ததும் வார்ப் பகுதியைத்தானே தவிர, வெஃப்ட் பகுதியை அல்ல. இது தொடர்பான அனைத்து ஆதாரங்களுடன், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் பாஜக சார்பில் புகாரளிக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பி.எஃப் வட்டி விகிதம் உயர்வு!
மோடி உயிருக்கு ஆபத்தா? பதைபதைக்கும் மத்திய, மாநில உளவுப் பிரிவுகள்!