தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியை 2026ல் முதல்வராக்குவது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நம் ஒவ்வொருவரின் கடமை என அண்ணாமலை பேசியுள்ளார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 5 மக்களவைத் தொகுதிகளைச் சார்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பூத் கமிட்டி மாநாடு நெல்லை தச்சநல்லூரில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
அப்போது முன்னாள் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், தமிழகத்தில் 2026ஆம் ஆண்டில் திமுகவின் ஆட்சி அகற்றப்பட பூத் முகவர்களின் பங்கு முக்கியமானது. அடுத்த 8 மாத காலம் பூத் பொறுப்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். திமுகவின் இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் பாஜகவைச் சேர்ந்த பலர் சிறைக்கு சென்றுள்ளனர்.
ஆர்ட்டிகிள் 370, புதிய கல்விக் கொள்கை முதல் நேற்று அமித் ஷா அறிமுகப்படுத்திய 130வது சட்டத்திருத்தம் வரை முதல்வர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறார். அவரை நிரந்தமாக பயமின்றி வீட்டிற்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
தமிழகர்களை பாஜக தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் முதல் சி.பி.ராதாகிருஷணை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக நிற்க வைத்துள்ளது. தேசிய அளவில் தமிழர்களின் பெருமை உயர, தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக வளர்ச்சியில்லை. இதை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
தேசிய ஜனநாயக ஆட்சியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியை 2026ல் முதல்வராக்குவது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நம் ஒவ்வொருவரின் கடமை. எனவே அடுத்த 8 மாதங்கள் நாம் கடுமையாக பாடுபட்டு உழைக்க வேண்டும்” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
