பாஜக எங்கேயும் பெரியாரை அவமதிக்கவில்லை எனவும் பெரியாருக்கு என்ன கவுரவம் கொடுக்க வேண்டுமோ அதனை நாங்கள் கொடுப்போம் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது கோவிலுக்கு முன் இருக்கும் பெரியார் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 9) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, “பெரியாரை பொறுத்தவரை பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை தொடர்ந்து நாம் தெளிவுப்படுத்தியிருக்கிறோம்.
பெரியார் எத்தனையோ விஷயங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். சமூக அநீதிகளை எதிர்த்து போராடி இருக்கிறார் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
இன்றைக்கு தமிழ்நாட்டின் அரசியலை பொறுத்தவரை மக்கள் நிறைய விஷயங்களை புதிதாக பேச ஆரம்பித்துள்ளார்கள். உதாரணத்திற்கு ஒரு முக்கியமாக கோவிலுக்கு வெளியே போகின்ற போது, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை பரப்புபவன் அயோக்கியன் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்ற போது அதனை ஏற்றுக் கொள்வதற்கு தமிழக மக்கள் தயராக இல்லை.
எங்களை பொறுத்தவரை பாஜக மக்கள் முன்பு தனது நிலைப்பாட்டை வைக்கிறது. 2026-ல் பாஜகவிற்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கும் போது அந்த வாசகங்கள் அங்கு இருக்காது.
அப்போது பெரியார் சிலைகளை என்ன செய்வீர்கள் என்று திமுக தலைவர்கள் பேசுகிறார்கள். கோவிலுக்கு வெளியே இருக்கும் பெரியார் சிலை எங்கு இருக்க வேண்டுமோ அங்கு செல்லும். எல்லா தலைவர்களும் இருக்கும் பொது இடத்தில் அந்த சிலைகள் செல்ல வேண்டும்.
எந்த சிலைகளையும் யாரும் சேதப்படுத்தப் போவது கிடையாது. அந்த சிலைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை பாஜக கொடுக்கும்.
பெரியார் இந்து மதத்திற்கு எதிராக சொன்ன கருத்துக்களை அரசியல் கட்சிகள் ஆதரிக்கிறார்கள். பெரியார் கம்யூனிசத்திற்கு எதிராக சொன்ன கருத்தை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வெளியில் வைக்கலாமா? இவர்களுக்கு ஒரு நியாயம், இந்து கோவில்களுக்கு ஒரு நியாயம் கிடையாது.
அதே போல் திமுகவிற்கு எதிராக பெரியார் சொன்ன கருத்தை திமுக அலுவலகத்திற்கு வெளியில் வைப்போம். இந்தியாவிலேயே காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டிய கட்சி என்று பெரியார் சொன்னதை காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியில் வைப்போம். அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
பாஜக பெரியாரை தவறாக பேசி விட்டார்கள், பாஜக பெரியாரை அவமதித்து விட்டார்கள் என்று அரசியல் கட்சிகள் சொல்வது சரி இல்லை. பாஜக எங்கேயும் பெரியாரை அவமதிக்கவில்லை. பெரியாருக்கு என்ன கவுரவம் கொடுக்க வேண்டுமோ அதனை நாங்கள் கொடுப்போம்.
அதே நேரத்தில் கோவிலுக்கு வெளியே, கடவுளை நம்ப கூடியவர்கள் செல்கின்ற வழியில் உள்ள வாசகங்களை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகளை நாங்கள் பிரதிபலிக்கின்றோம்.
பெரியாரை யாரும் தரம் குறைத்து பேசவில்லை. ஆனால் பொது இடத்தில் தான் சிலைகள் இருக்க வேண்டும். பெரியார் சொல்லக் கூடிய வாசகங்களை சார்ந்து யாராவது இயக்கம் நடத்தினால் அங்கு இருக்க வேண்டும். கோவிலுக்கு வெளியே இருக்கக் கூடாது என்பதை தான் பாஜக ஒரு பிரகடனமாக சொல்லி இருக்கிறோம். இதனை மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கோவிலுக்கு வெளியில் இருக்கும் பெரியார் சிலைகளை எடுக்க அரசியல் கட்சிகள் ஒப்பு கொள்ள மாட்டோம் என்றால், அரசியல் கட்சிகள் குறித்து பெரியார் கூறிய வாசகங்களை அந்தந்த கட்சி அலுவலகங்களுக்கு வெளியில் வைக்க வேண்டும்.
ஏனென்றால் உங்களுக்கு ஒரு நியாயம், கோவிலுக்கு ஒரு நியாயம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பிக்பாஸ்: இந்த ஐஷு எங்களுக்கு வேண்டாம்… உருகும் அம்மா!
ஓபிஎஸ் அதிமுக வேஷ்டி கட்டினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஜெயக்குமார்
Comments are closed.