என் பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தாதீங்க – அண்ணாமலை திடீர் வேண்டுகோள்

Published On:

| By Pandeeswari Gurusamy

Digital Thinnai Annamalai

சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, புதிதாக வீ த லீடர்ஸ் என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். இந்த அமைப்பில் தற்போது வரை 16 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். இந்நிலையில் தனது பெயரையோ அல்லது புகைப்படத்தையோ வேறு அமைப்புகள் பயன்படுத்த வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று (ஜூன் 8 ) அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ADVERTISEMENT

இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.

இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.

ADVERTISEMENT

ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.

எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் http://wetheleader.org என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share