தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாரத பிரதமர் என்று அக்கட்சி சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இன்று (ஆகஸ்ட் 19) காலை நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் பாதயாத்திரையைத் தொடங்கிய அண்ணாமலை, ராஜகோபால சுவாமி கோவில் அருகே முடித்தார்.
இந்த பாத யாத்திரையின் போது, மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்று வலியுறுத்தி பேசி வருகிறார் அண்ணாமலை.
இந்த பாத யாத்திரை தொடர்பாக தகவல்கள் பாஜகவின் ட்விட்டர் பக்கத்திலும் என் மண் என் மக்கள் என்ற ட்விட்டர் பக்கத்திலும் அப்டேட் செய்யப்படுகின்றன. அப்படி பாஜக ஐடி விங் போட்ட ஒரு ட்வீட் பேசு பொருளாகியுள்ளது.
அந்த பதிவில், “ஊழல் செய்வதும், மக்களை ஏமாற்றுவதும் தான் திமுக கூட்டணியின் வேலை. வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த மக்கள் விரோத ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் அண்ணாமலை நல்லாட்சியை மூன்றாவது முறையாகத் தொடரச் செய்வோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே பதிவை நேற்று அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் பாஜக முகநூல் பக்கத்தில் அண்ணாமலை பிரதமர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
‘அண்ணாமலை எப்போது பிரதமராக இருந்தாரு, மோடி ஜி இந்த அநியாயத்தைப் பாருங்கள், அண்ணாமலைக்கு ஆசை இருக்குமில்ல’ என கிண்டல் செய்து அந்த பதிவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்று காலை 10.10க்கு போடப்பட்ட இந்த பதிவு இன்னும் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
அலைச்சறுக்கு போட்டி: ஜப்பான் வீரர் வெற்றி!
“கலைஞரின் சாதனைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” – ஸ்டாலின்