குடியரசு துணைத் தலைவர் தேர்தல்… முதல்வர் தன் முடிவை பரிசீலனை செய்வார் : அண்ணாமலை நம்பிக்கை!

Published On:

| By christopher

annamalai

குடியரசு துணை தலைவர் வேட்பாளர் ஆதரவு விவகாரத்தில் முதலமைச்சர் தன் முடிவை பரிசீலனை செய்வார் என்றும், சிபி ராதாகிருஷ்ணனுக்கு தமிழகத்தில் இருந்து ஒருமித்த ஆதரவு கிடைக்கும் என்றும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து நேற்று இரவு தமிழகம் திரும்பிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மறைந்த நாகலாந்து ஆளுநர் இல கணேசன் தியாகராய நகர் இல்லத்திற்கு இன்று (ஆகஸ்ட் 20) நேரில் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த இல கணேசனின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் அங்கிருந்த அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

ADVERTISEMENT

திமுகவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு!

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணியில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சிபி இராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நிச்சயமாக வெற்றி பெற்று அந்த இருக்கைக்கு பெருமை சேர்ப்பார்.

தமிழகத்தில் அனைவரும் ஒன்றாக இருந்து சி பி ராதாகிருஷ்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது எங்கள் கட்சியின் விருப்பம். கடந்த காலங்களில் பிரதீபா பாட்டிலுக்கு சிவசேனா கட்சியினர் ஆதரவு கொடுத்தார்கள். இந்த விவகாரத்தில் அரசியல் பார்க்காமல் சிபி ராதாகிருஷ்ணனோடு நிற்பார்கள் என்று நம்புகிறோம்.

ADVERTISEMENT

இந்தியா கூட்டணி வேட்பாளரும் நல்ல வேட்பாளர் தான். முதலமைச்சர் இந்திய கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சருக்கு இன்னும் நேரம் இருக்கிறது. சிபி ராதாகிருஷ்ணனுக்கு தமிழகத்தில் இருந்து ஒருமித்த ஆதரவு கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

மனம் இருந்தால் மார்க்கமுண்டு. தமிழருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சாக்கு போக்கு சொல்லாமல் இதில் அரசியல் இல்லை என்பதை சொல்வதற்கு இது ஒரு வாய்ப்பு. தமிழருக்கு துணை நின்றோம் என்ற கருத்தை மக்களிடம் வைக்க திமுகவுக்கு இது நல்ல வாய்ப்பு.

ADVERTISEMENT

அனைவருக்குமான சட்டம்!

பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் பதவி நீக்கம் செய்யும் மசோதா குறித்த கேள்விக்கு…… இந்த மசோதா பிரதமர், அமைச்சர்கள், முதலமைச்சர், மாநில அமைச்சர்கள் என அனைவருக்குமான சட்டம். தனிப்பட்டவர்களுக்கானது அல்ல. டெல்லியிலும்… திமுக அரசிலும் ஒருவர் சிறையிலிருந்து கொண்டே அமைச்சராக இருந்தார்… எனவே வரவேற்கப்பட வேண்டிய சட்டம்.

யாரெல்லாம் பதவி பிரமாணம் எடுத்தார்களோ எல்லோருக்கும் இந்த சட்டம் பொருந்தும். 13 நாட்களில் பெயில் கிடைத்துவிடும்… ஆனால் 30 நாட்கள் கிடைக்காத பட்சத்தில் தான் இந்த சட்டம் பொருந்தும். இந்த சட்டத்தின் மூலம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறு செய்தால் அந்த பொறுப்பில் அவர்கள் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு பிறக்கும்.

தவெக மாநாட்டுக்கு வாழ்த்துகள்!

அனைவருக்கும் மாநாடு நடத்த உரிமை உள்ளது. தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு வாழ்த்துகள். ஆக்ரோஷமாக செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்… செல்லட்டும். ஆனால் மக்கள் எங்களின் சித்தாந்தத்தை, கொள்கையையும் அதிகமாக நம்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என அண்ணாமலை தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share