அதிமுகவுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (செப்டம்பர் 25) நடைபெற்றது.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிகாரப்பூர்வ தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனை அதிமுகவினர் மகிழ்ச்சியுடன் வரவேற்ற நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், “சித்தாந்தங்களின் அடிப்படையில் கூட்டணி இல்லை என்று கூறியிருந்தால் அது முதிர்ச்சியான முடிவாக இருந்திருக்கும். ஆனால் ஏதோ கூட்டம், தலைவர்களை குறிப்பிட்டு நாங்கள் விலகுகிறோம் என்று அதிமுக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எங்களுடைய தலைவர் அண்ணாமலை நல்ல அரசியல் ஞானம் பெற்றவர். கூட்டணி கட்சியினர் மனம் புண்படும் வகையில் அவர் ஒருகாலமும் பேசியது கிடையாது.
திமுகவில் இருக்க கூடிய சிக்கல்களையும், தவறுகளையும் சுட்டிக்காட்டுவாரே தவிர, மனம் புண்படும் வகையில் பேசமாட்டார்.
ஆனால் இதற்கு நேரெதிராக தற்போது கூட்டணிக்கான முறிவுக்கான காரணத்தை அதிமுக அறிவித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று வி.பி.துரைசாமி பேசியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா

Comments are closed.