அமைச்சர் அன்பில் மகேஷுக்கு கல்வித் துறை சம்பந்தமான பணிகள் குறித்துத் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். Annamalai criticized Anbil Mahesh
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசின் Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணை கூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை என்று பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை,
“கல்வித் துறையை, ரசிகர் மன்றம் போல நடத்திக் கொண்டிருக்கும் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு கல்வித் துறை சம்பந்தமான பணிகள் குறித்துத் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.
PMSHRI திட்டத்தில் இணைவோம் என்று உறுதியளித்து விட்டு, அதில் இணையாமல், அந்தத் திட்டத்துக்கான நிதியை வழங்கவில்லை என்று கூறுவதில் வெறும் அரசியலைத் தவிர வேறொன்றுமில்லை.
பள்ளி மாணவர்களின் கல்வியில் எதற்கு இந்த நேர்மையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை என்றால், விவரம் அறிந்தவர்களிடம் கேட்டாவது தெரிந்து கொள்ள வேண்டும்.
பிற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியும், வழங்கப்பட்ட நிதியும், அமைச்சர் பகிர்ந்துள்ள அறிக்கையிலேயே இருக்கிறது. எந்த மாநிலத்துக்குமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாமல் இருக்கும்போது, தமிழகத்துக்கான நிதியைப் பிற மாநிலங்களுக்குக் கொடுத்து விட்டார்கள் என்று பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா?
உங்கள் கையாலாகாத்தனத்துக்கு, இன்னும் எத்தனை ஆண்டுகள் மத்திய அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். Annamalai criticized Anbil Mahesh
