தனிமனித தாக்குதலில் தான் கோவை அரசியல் பிரச்சாரமே நடைபெற்று வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 3) குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு வருகிறார்.
நாளை தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின்னர் மதுரை செல்லும் அமித்ஷா, ராமஸ்ரீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். பின்னர் மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கிறார்.
நாளை மறுநாள் சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி தொகுதிகளில் பிரச்சாரம் செய்துவிட்டு, கேரளா செல்கிறார். பிரதமர் மோடியின் வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உறுதி செய்யப்பட்டவுடன் நாளை தெரிவிக்கிறோம். இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார்” என்று தெரிவித்தார்
அதிமுகவும், திமுகவும் பரப்புரையின் போது ஆடு பிரியாணி தயாராகிக்கொண்டிருக்கிறது என்று விமர்சனம் செய்து வருவது குறித்து பேசிய அண்ணாமலை, “என்னைப் பார்த்து எவ்வளவு பயப்படுகிறார்கள்? டிஆர்பி ராஜா பிரச்சாரத்திற்கு செல்லும்போது ஆட்டுக்குட்டியை தூக்கிக்கொண்டு போகிறார்.
நேற்று நான் பிரச்சாரத்திற்கு சென்றபோது கோவையில் உள்ள குரும்பா சமுதாய மக்கள் ஆட்டின் முடியிலிருந்து செய்யப்பட்ட கம்பளி போர்வையை கொண்டு வந்து எங்களுக்கு போர்த்தி விட்டார்கள். இது தான் ஜனநாயகம்.
ஒரு ஜனநாயகத்தின் மரபு என்பது அவர்கள் செய்யக்கூடிய தொழிலை அங்கீகாரம் கொடுத்து அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இவர்களெல்லாம் பணக்கார ஆட்கள்.
Born with a Silver spoon. அப்பா கொள்ளையடித்து சம்பாதித்து வைத்திருக்கிறார். டிஆர்பி ராஜா ஒரு நாளாவது வியர்வை சிந்தி உழைத்திருக்கிறாரா? கிராமத்திலோ அல்லது நகரத்திலோ உழைத்து சம்பாதித்திருக்கிறாரா? அதனால் அவர் அப்படித்தான் பேசுவார்.
தனிமனித தாக்குதலில் தான் கோவை அரசியல் பிரச்சாரமே நடைபெற்று வருகிறது. அதனால் ஆட்டை நீங்கள் பிரியாணி போட்டால், தயவு செய்து கொடுமைப்படுத்தாமல் பிரியாணி போடுங்கள். அது தான் என்னுடைய அன்பான வேண்டுகோள்.
ஜூன் 4-ஆம் தேதி மக்களின் தீர்ப்பை கோவையில் பாருங்கள். ஒரு புதிய சரித்திரம் இங்கே எழுதப்பட்டிருக்கும். என்ன தான் இவர்கள் தலைகீழே நின்றாலும், மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.
மோடி மீண்டும் வரவேண்டும், சாமானிய மனிதர்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார் எல்.முருகன்
வள்ளலார் சர்வதேச மையம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
Comments are closed.