தமிழக அரசின் பட்ஜெட் இலச்சினையில் இந்திய அரசின் ரூபாய் சின்னத்தை மாற்றுவது முட்டாள்தனம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். Annamalai condemns on rupee symbol change
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் நாளை (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ள 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் மாநில நிதிநிலை பட்ஜெட்டுக்கான இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அதில் ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டிற்கு (₹) பதில், தமிழ் எழுத்தான ‘ரூ’ என்பதை முதன்மைப்படுத்தி பட்ஜெட் இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் முந்தைய தனது இரண்டு பட்ஜெட்களிலும் ரூபாய் அடையாள குறியீடு பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த முறை அது மாற்றப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “2025-26 ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் மாநில பட்ஜெட்டில் ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசின் ரூபாய் சின்னம் மாற்றப்பட்டுள்ளது. இது முழு இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தின் குறியீடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சின்னத்தை வடிவமைத்த உதயகுமார், முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வின் மகன் ஆவார். இந்திய அரசின் சின்னத்தை மாற்றுவது முட்டாள்தனம்” என்று முதல்வர் ஸ்டாலினை அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.