annamalai condemned mk stalin bel industry procurement
பெல் நிறுவனத்திடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கேட்பாணை குறைந்து விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு காரணம் தமிழக அரசு தான் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, திருச்சி மாவட்டத்தின் சிறு, குறு நிறுவனங்கள் தான் பெல் பொதுத்துறை நிறுவனத்திற்கு தேவையான உதிரிபாகங்களை வழங்கி வந்தார்கள். தற்போது பெல் நிறுவனத்திடமிருந்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கேட்பாணை (procurement order) குறைந்து விட்டது.
இதனால் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் சிறு, குறு நிறுவனங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே பெல் நிறுவனம் மீண்டும் அதிகப்படியான கேட்பாணைகளை இவர்களுக்கு வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பெல் நிறுவனம் குறைவான ஆர்டர் கொடுத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற எரிசக்தி கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முதல்வர் ஸ்டாலின், பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு மீண்டும் ஒப்பந்தத்தை வழங்கினார். சமீப காலம் வரை அந்த பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்த ஒப்பந்தத்திற்கான மற்றொரு ஏலதாரரான பெல் நிறுவனத்தை தமிழக அரசு பரிசீலிக்கவில்லை. பிஜிஆர் எனர்ஜி உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்காக பெல் தொழிற்சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
பிஜிஆர் எனர்ஜி போன்ற ஆற்றல் குறைந்த நிறுவனத்திற்கு ரூ.4,422 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை நிறைவேற்ற திமுக ஆதரவு அளித்துள்ளது.
ஆனால் இன்று பெல் நிறுவனத்தின் ஆர்டர்களை நம்பியிருக்கும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் முதலை கண்ணீர் வடிக்கிறார். இந்த நிலைக்கு தாங்கள் தான் காரணம் என்பதை திமுக இன்னும் உணரவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையத்தை விரிவாக்கம் செய்து 600 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட கூடுதல் அலகை அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த 2019-ஆம் ஆண்டு டெண்டர் கோரியது.
இந்த டெண்டரை லான்கோ என்ற நிறுவனம் கைப்பற்றியது. ஆனால் பணிகளை முழுமையாக முடிக்காததால் பிஜிஆர் எனர்ஜி என்ற மற்றொரு நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது.
டெண்டருக்கான 10 சதவிகிதத்தை வங்கி உத்தரவாதமாக 30 நாட்களில் கட்ட வேண்டும். ஆனால் பிஜிஆர் நிறுவனம் 16 மாதங்களாகியும் நிலுவை கட்டணம் செலுத்ததால் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி டெண்டர் ரத்து செய்து டான்ஜெட்கோ உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து பிஜிஆர் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மீண்டும் டெண்டர் கோரக்கூடாது, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்தநிலையில் கடந்த 2022 மார்ச் மாதம் ரத்து செய்யப்பட்ட டெண்டரை மீண்டும் பிஜிஆர் நிறுவனத்திற்கே தமிழக அரசு வழங்கியது.
பிஜிஆர் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறி திருச்சி, திருமயம், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பெல் நிறுவன தொழிற்சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த சூழலில், பெல் நிறுவனத்திடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கேட்பாணை குறைந்து விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு காரணம் தமிழக அரசு தான் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசு கட்டுமான ஒப்பந்த நிறுவனங்களில் 8 மணி நேரமாக தொடரும் ஐடி ரெய்டு!
“வீண் பயிற்சியில் அமலாக்கத் துறை” : கார்த்தி சிதம்பரம்
annamalai condemned mk stalin bel industry procurement