கோவை காந்திபுரம் சிறைச்சாலை வளாக பகுதியில் 45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 208.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 25) திறந்து வைத்துள்ளார். செம்மொழி பூங்கா திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், “முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கோயம்புத்தூர் செம்மொழி பூங்கா திறப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், திறப்பு விழா நடைபெற்றிருக்கிறது. தமிழகத்தில், இந்த செம்மொழிப் பூங்காக்கள், தமிழ் மொழியைப் போற்றுவதற்காக அமைக்கப்படுகின்றன என்று திமுக கூறுவதுதான் இதில் நகைமுரண்.
உயிரோடும், உணர்வோடும் இருக்க வேண்டிய தமிழ்ப் பற்றை, தங்கள் பிரிவினைவாத அரசியலுக்காகவும், தங்கள் பிழைப்புவாத வியாபாரத்திற்காகவும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது திமுக. அதனால்தான், தமிழ் மொழி மீது அக்கறை இருப்பதுபோலக் காட்டிக்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழக அரசு விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்பது கூட உரைக்க வில்லை.
இனியாவது, வெறும் உதட்டளவில் தமிழ்ப் பற்று பேசாமல், உண்மையாகவே தமிழ் மொழி மீது அக்கறை காட்டும்படி, முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
