பிப்ரவரி 14ஆம் தேதியை ‘பசு அரவணைப்பு தினமாக’ கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள விலங்குகள் நல வாரியம், ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில், வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு பசு மாடுகளைக் கட்டிப் பிடிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
காதலர் தினத்தில் காதலர்கள் மட்டுமின்றி அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தங்களது அன்பைப் பகிர்ந்து கொண்டாடும் சூழலில் விலங்குகள் நல வாரியம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு கடும் எதிர்ப்புக்கு உள்ளானது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “பசு அரவணைப்பு நாளாகக் கடைப்பிடிக்குமாறு அறிவித்திருப்பது அறிவார்ந்த செயல் அல்ல. அது ஒன்றிய அரசின் கால்நடைத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் வெளியாகியிருப்பது வெட்கக்கேடானது” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, நடிகை கஸ்தூரி, நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர்.
அதுபோன்று நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இந்த அறிவிப்பை இன்று விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.
பிரியா
